பல்லகலே, இலங்கை: இலங்கைக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியைக் காண வந்த ஆஸ்திரேலியா நாட்டு ரசிகர் ஒருவர், திடீரென மைதானத்திற்குள் நிர்வாணமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை கைது செய்த போலீஸார் பின்னர் சிறையில் அடைத்தனர்.
அவரை 7 நாள் சிறையில் அடைக்க இலங்கை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பல்லகலே நகரில்தான் இந்தக் கூத்து நேற்று நடந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
ஆனால் மழை காரணமாக போட்டி நேற்று பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் ஓடினார்.
அவரது பெயர் அலெக்ஸ் ஜேம்ஸ். கிரவுண்டுக்குள ஓடிய அவர் திடீரென தனது உடையை கழற்றிப் போட்டார். பின்னர் நிர்வாணமாக ஓடினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை மடக்கி் பிடித்து ஆடையை அணிய வைத்து அங்கிருந்து கொண்டு சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவரை கண்டி கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 7 நாள் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட நபர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்தவர். அவருக்கு 7 நாள் சிறை மட்டுமல்லாமல் 3000 இலங்கை ரூபாய் (அதாவது 30 ஆஸ்திரேலிய டாலர்) அபராதமும் விதிக்கப்பட்டது.