ராஜ்கோட்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 124 ரன்களில் ஆட்டமிழந்தார். மொய்ன் அலி 99 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. கடந்த 2012, 2014-ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

இதில் டாசில் வென்ற இங்கிலாந்து கேப்டன் குக் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக குக்கும், ஹமீதும் களமிறங்கினர். ரவீந்திர ஜடேஜா ஸ்பின்னில் சிக்கிய குக் 21 ரன்களில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஹமீதுடன், ஜோ ரூட் இணைந்தார். இந்த ஜோடி சிறிது நேரம் நிலைத்து விளையாடியது. ஹமீத் 31 ரன்கள் எடுத்தபோது அஸ்வின் சுழலில் சிக்கி எல்பிடபிள்யூ ஆனார்.
அதன்பின்னர் ஜோ ரூட் பொறுப்புடன் விளையாட, மறுமுனையில் டக்கெட் 13 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 32.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்திருந்தது. இதற்குப் பிறகு இந்திய அணி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜோ ரூட், மொய்ன் அலி ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இந்திய பந்து வீச்சாளர்களின் மாயாஜாலம் இவர்களிடம் பலிக்கவில்லை. இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடியும் முடியவில்லை. இதனிடையே ஜோ ரூட் 11 வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் மொய்ன் அலி அரை சதம் கடந்தார்.
இங்கிலாந்து அணி 300 ரன்களை நெருங்கியபோது ஜோ ரூட் 124 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து ஸ்டோக்ஸ் களமிறங்க, இன்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் சேர்த்துள்ளது. மொய்ன் அலி 99 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.