அபுதாபி: நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் அடித்துத் துவைத்து விட்டனர் நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை.
2வது நாள் ஆட்டத்தின்போது இன்று அகமது செஷாத் அபாரமாக ஆடி 176 ரன்களை எடுத்தார். ஆனால் அவரது தலையில் காயம் ஏற்பட்டதால் மேற்கொண்டு விளையாட முடியாமல் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதேபோல யூனிஸ்கான், மிஸ்பா உல் ஹக் ஆகியோரும் தங்களது பங்குக்கு ஆளுக்கு ஒரு சதம் போட்டனர். இதனால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 566 ரன்களைக் குவித்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக கடைசி ஓவரின்போது செஷாத் காயமடைந்தார். நியூசிலாந்து வேகப் பந்து வீச்சாளர் கோரி ஆண்டர்சன் வீசிய பந்தை அடித்தபோது அது ஷார்ட் பிட்ச் ஆக வந்தது. இதனால் தடுமாறிய அவர் பின்னோக்கிப் போனார். அப்போது அவரது பேட் ஸ்டம்பில் பட்டு ஹிட் விக்கெட் ஆனது. செஷாத்தும் கீழே விழுந்து விட்டார். அதன் பின்னர் அவர் காயத்துடன் திரும்பினார். அதன் பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரது தலையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் அடுத்த 48 மணி நேரத்திற்குக் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 371 பந்துகளைச் சந்தித்த செஷாத், 17 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் ரன் மழை பொழிந்தார். மறுபக்கம் யூனிஸ் கான் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவருக்கு 28வது டெஸ்ட் சதமாகும். மிஸ்பா உல் ஹக் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அஸார் அலி 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.
2வது நாள் ஆட்ட நேர இறுதியில் நியூசிலாந்து விக்கெட் இழப்பில்லாமல் 15 ரன்கள் எடுத்துள்ளது. பாலோ ஆனைத் தவிர்க்க நியூசிலாந்து அணி இன்னும் 352 ரன்களை எடுத்தாக வேண்டும்.