கான்பூர்: இந்தியா - நியூசிலாந்து இடையிலான கான்பூர் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா பெரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்த்த நிலையில் ஸ்பின்னர்களை வைத்து இந்தியாவைப் பதம் பார்த்து விட்டது நியூசிலாந்து.
நம்பிக்கை நாயகர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விழ, இந்தியா பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போய் விட்டது.
இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டி கான்பூர். எனவே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. காலையில் டாஸ் வென்ற கேப்டன் கோஹ்லி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முரளி விஜய்யும், ராகுலும் தொடக்கம் கொடுத்தனர். ராகுல் அடித்து ஆடி வந்த நிலையில் 32 ரன்களில் ஸ்பின்னர் சான்ட்னர் பந்தில் வீழ்ந்தார்.
அடுத்து முரளி விஜய்யும், சட்டேஸ்வர் புஜாராவும் சிறப்பாக ஆடி வந்தனர். இருவரும் அரை சதம் போட்டனர். புஜாரா 62 ரன்கள் எடுத்த நிலையில் சான்ட்னர் பந்தில் அவுட்டானார். அதேபோல கேப்டன் கோஹ்லியும் 9 ரன்களில் வாக்னர் பந்தில் வீழ்ந்தார். தொடர்ச்சியாக முரளி விஜய்யை 65 ரன்களில் இந்தர் சிங் சோதி அவுட்டாக்கினார்.
பின்னர் வந்தவர்களில் ரோஹித் சர்மா 35, ரஹானே 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். சான்ட்னர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்து விட்டார். அதேபோல பின்னர் போல்ட் இந்தியாவின் கடைசி வரிசையைக் காலி செய்து விட்டார். சஹாவையும், முகம்மது சமியையும் போல்ட் காலி செய்தார்.
நம்பிக்கை அளித்து வந்த அஸ்வினையும் அவரே வீழ்த்தி வெளியேற்றினார். 40 ரன்களில் அஸ்வின் அவுட்டானார். தற்போது ரவீந்திர ஜடேஜாவும், உமேஷ் யாதவும் களத்தில் உள்ளனர். ஜடேஜா 16 ரன்களுடனும், யாதவ் 8 ரன்களுடனும் உள்ளனர். ஆட்ட நேர இறுதியில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா இன்று பெரிய ஸ்கோருடன் முதல் டெஸ்ட்டைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சான்ட்னரும், பின்னர் போல்ட்டும் இந்தியாவின் கனவைத் தகர்த்து விட்டனர். சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 5 விக்கெட்களை இன்று வீழ்த்தினர்.