தீபக் சாஹருக்கு பதில் யார்?
தீபக்சாஹர் பதிலாக வேறு எந்த வேகப்பந்துவீச்சாளரும் அணியில் இல்லை. கூடுதல் வீரராக இடம்பெற்றிருந்த குல்தீப் சென்னும் காயம் காரணமாக தொடர்ந்து வெளியேறி இருக்கிறார். தற்போது தீபக்சாஹரும் சென்று விட்டதால் முழு உடல் தகுதியுடன் சர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், முகமது சிராஜ் ஆகிய மூன்று வேக பந்துவீச்சாளர் மட்டுமே இருக்கிறார்கள். இதனால் நாளைய ஆட்டத்தில் இந்திய அணி கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளரை சேர்த்துக்கொண்டு விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
கேஎல் ராகுல் கேப்டன்
இதனால் ஷாபாஷ் அகமது இந்திய அணியின் பிளேயிங் லெவனுக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரோகித் சர்மா கடைசி ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார். இதனால் அவருக்கு பதில் கே எல் ராகுல் அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மாவுக்கு பதில் இஷான் கிஷனை தொடக்க வீரராக சேர்க்க அதிக வாய்ப்பு உள்ளது. ஷிகர் தவான், விராட் கோலி ,கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பெரிய இன்னிங்ஸ் ஆடி ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும்.
வேகப்பந்துவீச்சாளர் குறை
பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். பந்துவீச்சில் இந்திய அணி தங்களுடைய யுத்தியை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் சில ஓவர்களில் சிறப்பாக செயல்படும் இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர்கள், இறுதிக்கட்டத்தில் சொதப்பி வருகிறார்கள். குறிப்பாக கடைசி ஓவர்களில் ஒரு யாக்கர் கூட வீச முடியாத நிலையில் இந்திய அணி வீரர்கள் இருக்கிறார்கள்.
ஓயிட்வாஷ் தவிர்க்குமா இந்தியா?
வங்கதேசம் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் முன் வரிசை வீரர்கள் சொதப்பினாலும் மஹம்மதுல்லா, மேஹதி ஹசன் போன்ற வீரர்கள் தனி ஆளாக நின்று ஆட்டத்தை மாற்றி விடுகிறார்கள். அந்த அணியின் பந்துவீச்சும் அசுரபலத்தில் இருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு எதிராக தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்ய வேண்டிய உத்வேகத்தில் அந்த அணி வீரர்கள் இருக்கிறார்கள். ஒயிட்வாஷ் என்ற வெட்கக்கேட்டை இந்தியா தவிர்க்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.