டிரிண்டாட் : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் நடைபெறுகிறது. இந்த தொடர் நடைபெற இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் அதில் யார் யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்காக இந்தியா தற்போது ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
50 ஓவர் உலகக் கோப்பை இன்னும் இரண்டு மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் அதே நேரத்தில் டி20 உலக கோப்பைக்கும் இந்தியா தயாராகி வருகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளமே இன்றைய ஆட்டத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோமன் போவெல், ஆடுகளம் காய்ந்த நிலையில் இருக்கிறது. இதனால் இந்தியா நிச்சயம் அதிக சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவார்கள்.
இதன் காரணமாக நாங்கள் அதிரடி பேட்ஸ்மேன்களை தேர்வு செய்திருக்கிறோம். எங்களுடைய அணி வீரர்கள் நல்ல நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். எங்கள் அணி வீரர்கள் எப்போதும் அதிரடியாக விளையாட கூடியவர்கள். அந்த யுத்தியில் இருந்து நாங்கள் மாறவில்லை. எங்களுடைய பலம் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நாங்கள் விளையாட போகிறோம் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய ஹர்திக் பாண்டியா இன்னும் எட்டு மாதங்களில் உலகக் கோப்பை இங்கு நடைபெற இருக்கிறதும் அதற்கு தயாராகும் வகையில் தான் இந்த தொடரையே நாங்கள் பிளான் செய்திருக்கிறோம். சில வீரர்கள் இங்கே முதல்முறையாக விளையாட இருக்கிறார்கள். அவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.
எப்போதும் நம்முடைய கிரிக்கெட்டில் முன்னேற்றம் அடைந்து கொண்டு இருக்க வேண்டும். பயிற்சியில் அதற்காக கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பயணத்தில் உங்களுக்கு வெற்றியும் தோல்வியும் கிடைக்கும். ஆனால் நம்மை நாமே சவால்களை போட்டுக் கொண்டு விளையாட வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா கூறினார். இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.