மீண்டும் அதே பிரச்சினையா.. இந்திய அணியில் தலைதூக்கும் புதிய பூகம்பம்.. வழிவிடுமா பிசிசிஐ - விவரம்!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் மீண்டும் பழைய பிரச்சினையே உருவெடுக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் வெற்றிகளை சந்தித்த இந்திய அணி, கடைசி நேரத்தில் எப்படி தோற்றது என்ற ஆச்சரியம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருந்து வருகிறது.
இந்த தோல்விக்கான நடவடிக்கையாக நேரடியாக இந்திய அணியின் தேர்வுக்குழு மீது கை வைத்தது பிசிசிஐ. 2021, 2022 என இரண்டு ஆண்டு டி20 உலகக்கோப்பை, ஆசிய கோப்பைகளுக்கு இந்த குழு தான் வீரர்களை தேர்வு செய்தது. ஆனால் தோல்வி தான் மிச்சம்.

தேர்வுக்குழு நியமனம்
இதனையடுத்து இனி இந்திய அணியின் தேர்வுகள் சரியாக வேண்டும் என்பதால் மிக முக்கியமான சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டது. இதில் சேட்டன் சர்மா மற்றும் ஹர்விண்டர் சிங் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே நீக்கப்பட்டனர். மேலும் புதிய விண்ணப்பங்களும் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முக்கிய நபர்கள்
பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த விண்ணப்பப்பதிவு முடிவடைந்த சூழலில் வெறும் 5 இடங்களுக்கு நாடு முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் இருந்து தென்னிந்தியா, வட இந்தியா என 5 வகையில் பிரிக்கப்பட்டு தேர்வுக்குழு அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள். டிசம்பர் மத்தியில் புதிய தேர்வுக்குழு பொறுப்பேற்கும் என தெரிகிறது.

மீண்டும் விண்ணப்பம்
இந்நிலையில் இந்த பட்டியலில் சேட்டன் சர்மா மற்றும் ஹர்விண்டர் சிங் ஆகியோர் மீண்டும் அதே பதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் தவிர வெங்கடேஷ் பிரசாத், நயன் மாங்கியா, மனிந்தர் சிங், ஹேமன் பதானி போன்ற ஸ்டார் வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் மீண்டும் அவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுமா என்ற குழப்பம் நிலவி வருகிறது.

ரசிகர்களின் எதிர்ப்பு
இந்தியாவில் சீனியர்கள், இளம் வீரர்கள் என கலந்த அணியை உருவாக்குவதில் தான் சிக்கல் உண்டாக்கியுள்ளது. சரியான ஓய்வு இல்லாததால் ஒரு சில முக்கியமான வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டு விடுகின்றனர். எனவே இதற்கு காரணமான அவர்களை மீண்டும் கொண்டு வரக்கூடாது என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications