
சிஎஸ்கேவின் திட்டம்
சென்னை அணியின் கையில் தற்போது ரூ.20.45 கோடி உள்ளது. அவர்களுக்கு இன்னும் 7 வீரர்கள் வரை தேவைப்படுகின்றனர். இதில் பிராவோவின் இடத்தை நிரப்ப சாம் கரண் கொண்டு வரப்படுகிறார் என்று கூறப்படுகிறது. இதே போல சீனியர் வீரர் அம்பத்தி ராயுடுவின் இடத்திற்கு மணிஷ் பாண்டே, உத்தப்பா இடத்திற்கு ரீலே ரூசோவ் போன்ற வீரர்களை கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியானது.

தோனிக்கான மாற்று
இந்நிலையில் தோனியின் விக்கெட் கீப்பிங் இடம் மற்றும் சூழலுக்கு ஏற்ப அதிரடி காட்டும் வீரர் என்ற இடத்தை நிரப்பப்போவது யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. டெவோன் கான்வே, பேர்ஸ்டோ என பல்வேறு அயல்நாட்டு வீரர்களுக்கும் திட்டம் போடப்பட்ட சூழலில் 2 தமிழக வீரர்களை இறுதி செய்துள்ளதாக தெரிகிறது. அதில் முதல் வீரர் நாராயண் ஜெகதீசன்.

ஏன் ஜெகதீசன்
2022ம் ஆண்டு சிஎஸ்கே அணியால் ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்ட ஜெகதீசன் முழுமையாக பயன்படுத்தப்படாமல் கழட்டிவிடப்பட்டார். ஆனால் அங்கிருந்து வெளிவந்த உடனேயே, தான் யார் என்பதை நிரூபித்தார். விஜய் ஹசாரே தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்து வரலாற்று சாதனை படைத்தார். இதே போல ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன் என்ற ரோகித்தின் 264 ரன்களை உடைத்து 277 ரன்களுடன் புதிய சாதனையை படைத்தார். இதனால் அவரின் மதிப்பு தற்போது எகிறியுள்ளது.

ஆனால் ஒரு சிக்கல்
28 வயதே ஆகும் ஜெகதீசன் மிடில் ஆர்டரில் சூழலை புரிந்து ஆடக்கூடியவர். விக்கெட் கீப்பிங் திறமையும் சிறப்பாக உள்ளதால் மீண்டும் அவருக்கு சிஎஸ்கே குறிவைக்கலாம். ஆனால் மீண்டும் ரூ.20 லட்சத்திற்கு கிடைக்கமாட்டார். பல அணிகளும் குறிவைப்பதால் ஜெகதீசனை வாங்க சிஎஸ்கே குறைந்தது ரூ.1 கோடி வரை செலவளிக்க நேரிடும் என தெரிகிறது.

2வது தமிழக வீரர்
ஒருவேளை ஜெகதீசனை வாங்க முடியாமல் போனால், அடுத்த தேர்வாக இருப்பது பாபா இந்திரஜித் தான். 28 வயதே ஆகும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இந்திரஜித், கடந்தாண்டு கொல்கத்தா அணியால் ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். ஆனால் 3 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு தந்துவிட்டு கழட்டிவிட்டனர். அதில் இருந்து கம்பேக் தந்த அவர் ரஞ்சிக்கோப்பையில் 3 போட்டிகளில் ஆடி மூன்றிலுமே சதமடித்து பதிலடி கொடுத்தார். அவரை வாங்குவதற்கு போட்டி குறைவு என்பதால் அவரை சிஎஸ்கே வாங்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications