இன்னும் பயம் போகலை.. 2009 பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் தப்பிய அம்பயரின் அதிர்ச்சி கதை!
டெல்லி : பாகிஸ்தானின் லாகூரில் கடந்த 2009ல் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 வீரர்கள் மற்றும் ஊழியர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தன்னை தொடர்ந்து அச்சமூட்டுவதாக ஐசிசி அம்பயர் சைமன் டாபெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதி வெளியிட்டுள்ள "Finding the Gaps" என்ற புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2012 முதல் 2016 வரை ஐசிசியில் ஆறு முறை அம்பயராக இருந்துள்ள சைமன் டாபெல், பலத்த சத்தங்கள் கேட்டால் தற்போதும் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் கூறியுள்ளார்.

தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு
கடந்த 2009ல் பாகிஸ்தானில் இலங்கை அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மைதானத்திற்கு செல்லும் வழியில் அவர்கள் மீது தீவிரவாத இயக்கங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தின. இதில் இலங்கையின் 7 வீரர்கள் மற்றும் ஊழியர்கள் காயமடைந்தனர். மேலும் 8 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.

பேருந்தின்மீது தாக்குதல்
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை வீரர்கள், கடாபி மைதானத்தை நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தை வழிமறித்த தலிபான் மற்றும் லஷ்கர் இ ஜாங்கி தீவிரவாதிகள், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

சைமன் டாபெல்
இந்த தாக்குதலில் குமார சங்ககாரா, அஜந்தா மெண்டிஸ், திலன் சமரவீரா உள்ளிட்ட இலங்கை வீரர்கள் காயமடைந்ததாக குறிப்பிட்ட சைமன், இதையடுத்து அம்பயர்கள் நால்வரும் பாதுகாப்பாக துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக எச்சரிக்கை
இந்த தொடரில் சைமன் மற்றும் ஸ்டீவ் டேவிஸ் ஆகியோர் களத்தில் அம்பயர்களாக இருந்ததாகவும் நதீம் காவ்ரி மற்றும் ஆசான் ரசா ஆகியோர் முறையே 3வது மற்றும் 4வது அம்பயர்களாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாகவே அங்கு பாதுகாப்பு குறைபாடு இருந்தது குறித்து ஐசிசிக்கு தாங்கள் முறையிட்டதாகவும் அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெருத்த சத்தங்களால் பாதுகாப்பின்மை
இந்த சம்பவங்கள் நடைபெற்று 10 ஆண்டுகள் கழிந்துள்ள போதிலும், அதன் பாதிப்பு இன்னும் தனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ள சைமன் டாபெல், பெருத்த சத்தங்கள், பட்டாசு வெடிக்கும் ஓசைகள் உள்ளிட்டவற்றை கேட்டால் தற்போதும் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தன்னுடைய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications