
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி
2011 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. அந்தப் போட்டியில் இலங்கை அணி 275 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இந்தியா அந்த இலக்கை சேஸிங் செய்து உலகக்கோப்பை வென்றது.

மேட்ச் பிக்ஸிங் புகார்
ஒன்பது ஆண்டுகள் கழித்து அந்த இறுதிப் போட்டி நடந்த போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அலுத்கமகே, அந்தப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக, இலங்கை அணி இறுதிப் போட்டியை விற்று விட்டதாக கூறி அதிர வைத்தார்.

முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு
அவரது குற்றச்சாட்டுக்கு முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் கேப்டன்கள் குமார் சங்ககாரா மற்றும் மகிளா ஜெயவர்தனே யார் இதில் ஈடுபட்டார்கள்? ஆதாரம் என்ன? என கேள்வி எழுப்பினர். சங்ககாரா, இந்த விவாகரத்தை ஐசிசி-யிடம் எடுத்துச் செல்லுமாறும் கூறி இருந்தார்.

அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
அதற்கு பதில் அளித்த மஹிந்தானந்த அலுத்கமகே கிரிக்கெட் வீரர்கள் யாரையும் தான் சொல்லவில்லை என்றும், சில அதிகாரிகள் அந்த உலகக்கோப்பை தோல்வி அடைந்த அதே ஆண்டில் கார் கம்பெனிகளையும், புதிய வியாபாரங்களையும் துவக்கினார்கள் என புதிய குற்றச்சாட்டை முன் வைத்தார்.

விசாரணை துவக்கம்
இந்த விவகாரம் இலங்கை விளையாட்டு வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போதைய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் இது பற்றி விசாரிக்க உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணை துவங்கியது. இதுபற்றி குற்றச்சாட்டை முன்வைத்த மஹிந்தானந்த அலுத்கமகே அழைக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் என்ன சொன்னார்?
மஹிந்தானந்த அலுத்கமகே தான் அந்த இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்து இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும், அது பற்றி விசாரிக்க வேண்டும் எனவும் விசாரணையில் தெரிவித்ததாக கூறினார். தான் ஐசிசியிடம் 2012இல் அளித்த புகாரின் நகலை காவல்துறையிடம் அளித்துள்ளதாகவும் கூறினார்.

உண்மையா?
ஆக, மொத்தத்தில் மேட்ச் பிக்ஸிங் நடந்தது, உலகக்கோப்பை இறுதிப் போட்டியை விற்று விட்டோம் என்றெல்லாம் கூறியவர் பல்டி அடித்து தான் சந்தேகப்படுவதாக கூறி இருக்கிறார். தற்போது அவர் சொன்ன புகார் உண்மையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியா விசாரிக்க வேண்டும்
முன்னதாக 2011 உலகக்கோப்பை நடந்த போது இலங்கை அணியின் தேர்வுக் குழு தலைவராக இருந்த அரவிந்தா டி சில்வா, இந்த புகாரை இலங்கை, ஐசிசி மற்றும் பிசிசிஐ விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இந்திய அணி மேட்ச் பிக்ஸிங் செய்த உலகக்கோப்பையை வென்றதா என இந்திய அரசு விசாரணை செய்து இது பொய் என காட்ட வேண்டும் எனவும் அவர் கூறி இருந்தார்.


Click it and Unblock the Notifications











