
இந்தியா வெற்றி
2011ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. அது இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத வெற்றி ஆகும். அந்தப் போட்டி குறித்து ஒன்பது ஆண்டுகள் கழித்து தற்போது பரபரப்பு எழுந்துள்ளது.

கார் கம்பெனி
2011இல் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சராக இருத்த மஹிந்தானந்த அலுத்கமகே அந்தப் போட்டியை இலங்கை விற்று விட்டதாகவும், சில இலங்கை கிரிக்கெட் தொடர்பான அதிகாரிகள் அதே ஆண்டு கார் கம்பெனியை விலைக்கு வாங்கியதாகவும், புதிய வியாபாரங்களை துவங்கியதாகவும் கூறி இருந்தார்.

ஆதாரம் என்ன?
அவரது குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. முன்னாள் வீரர்களும், அந்த இறுதிப் போட்டியில் பங்கேற்றவர்களுமான குமார் சங்ககாரா மற்றும் மகிளா ஜெயவர்தனே மேட்ச் பிக்ஸிங் செய்தது யார்? என்றும் ஆதாரம் என்ன? என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

அணி மாற்றம்
அதற்கு பதில் அளித்த மஹிந்தானந்த அலுத்கமகே, வீரர்களை தான் குறிப்பிடவில்லை என்றும், கடைசி நேரத்தில் நான்கு வீரர்கள் கிரிக்கெட் போர்டு அதிகாரிகளுக்கு தெரியாமல் இறுதிப் போட்டிக்கான அணியில் மாற்றப்பட்டார்கள் எனவும் கூறி இருந்தார்.

காவல்துறை விசாரணை
இந்த நிலையில், தற்போதைய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த விவகாரத்தை விசாரிக்க முடிவு செய்து உத்தரவிட்டார். காவல்துறை விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது. முதலில் புகார் கூறிய முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிடம் விசாரணை நடந்தது.

ஆறு மணி நேரம் விசாரணை
அதைத் தொடர்ந்து அப்போதைய தேர்வுக் குழு தலைவர் அரவிந்தா டி சில்வாவிடம் விசாரணை நடந்தது. அவரிடம் ஆறு மணி நேரம் விசாரணை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த புகாரில் முதன் முறையாக அந்தப் போட்டியில் ஆடிய கிரிக்கெட் வீரரான உபுல் தரங்கா விசாரிக்கப்பட்டார்.

நிதான ஆட்டம் ஆடியவர்
உபுல் தரங்கா துவக்க வீரராக களமிறங்கி 20 பந்துகளில் 2 ரங்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அவரது நிதான ஆட்டம் அவரை விசாரணைக்கு உட்படுத்தி இருக்கலாம். அடுத்ததாக அந்தப் போட்டியின் கேப்டன் குமார் சங்ககாரா விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

குமார் சங்ககாராவிடம் விசாரணை
குமார் சங்ககாரா கேப்டன் என்ற நிலையில் கடைசி நேர அணி மாற்றம் குறித்து அவரிடம் விசாரணை நடந்திருக்கக் கூடும் என தகவல்கள் கூறுகின்றன. அவர் விசாரணை நடக்கும் இடத்திற்கு சென்ற பின் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேல் வெளியே வரவில்லை.

அடுத்தது யார்?
குமார் சங்ககாராவிடம் நடந்த நீண்ட நேர விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் துணை கேப்டன் மகிளா ஜெயவர்தனேவிடமும் விசாரணை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











