
2011 உலகக்கோப்பை
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஏப்ரல் 2, 2011 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 275 ரன்கள் வெற்றி இலக்கை சேஸிங் செய்து உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி.

பகிரங்க குற்றச்சாட்டு
அந்த போட்டி நடந்து 9 ஆண்டுகள் ஆன நிலையில் அப்போதைய இலங்கை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தற்போது அந்தப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக பகிரங்க புகார் ஒன்றை கூறி உள்ளார். அது பற்றி அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.

என்ன சொன்னார்?
மஹிந்தானந்த அலுத்கமகே கூறுகையில், 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியை இலங்கை அணி வென்று இருக்க வேண்டும் என்றும், ஆனால், சில குழுக்கள் மேட்ச் பிக்ஸிங் செய்து வெற்றியை விற்று விட்டதாக கூறி இருந்தார். வீரர்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை என்றும் கூறி இருந்தார்.

ஜெயவர்தனே கோபம்
முன்னாள் இலங்கை அணி கேப்டன்களும், அந்தப் போட்டியில் ஆடிய மூத்த வீரர்களும் ஆன குமார் சங்ககாரா, மகிளா ஜெயவர்தனே அவரது குற்றச்சாட்டை கண்டு கடும் கோபம் கொண்டனர். ஜெயவர்தனே ஆதாரத்தை காட்டுமாறு கேட்டார்.

சங்ககாரா என்ன சொன்னார்?
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்த குமார் சங்ககாரா ஆதாரத்தை எடுத்துக் கொண்டு அவர் ஐசிசிக்கு செல்ல வேண்டும் எனவும் கூறி தன் கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். இரண்டு முன்னாள் வீரர்களும் ஆதாரம் கேட்டு இருந்தனர்.

விளக்கம்
அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அந்த அமைச்சர், வீரர்கள் யாருக்கும் இதில் தொடர்பு இல்லை எனவும், முன்னாள் வீரர்கள் ஏன் கோபம் அடைய வேண்டும் எனவும் கேட்டு இருக்கிறார். ஆனால், சில அதிகாரிகள் இதில் ஈடுபட்டதாகவும் கூறி உள்ளார்.

அதிகாரிகள்
சில அதிகாரிகள் எப்படி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வி அடைந்த அதே ஆண்டில் கார் கம்பெனிகளையும், புதிய வியாபாரங்களையும் தொடங்கினார்கள்? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது பற்றி தான் அப்போதே பேசியதாகவும் கூறி உள்ளார்.

புகார் அளித்தும் பலனில்லை
2012இல் இந்த விவகாரம் குறித்து தான் ஐசிசி-க்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால், அதை யாருமே கண்டு கொள்ளவில்லை எனவும் கூறி உள்ளார். மேலும், அந்த அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிர்ச்சி
முன்னாள் அமைச்சரின் இந்த புகார் கிரிக்கெட் உலகில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் இந்த புகாரை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகார் குறித்து பிசிசிஐ இதுவரை எதுவும் கூறவில்லை.


Click it and Unblock the Notifications











