சென்னை : 2014ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வியடைந்து இந்திய அணி கோப்பையை பறிகொடுத்தது எப்படி என்று பார்க்கலாம்.
2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி தொடர்களை இந்திய அணி அடுத்தடுத்து வென்றிருந்தது. இதனால் 2014ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரையும் இந்திய அணி வெல்வதற்கு சிறந்த வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இந்திய அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இறுதிப்போட்டியில் இலங்கை அணியை எளிதாக வீழ்த்த முடியும் என்று பார்க்கப்பட்டது.

இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. 2வது ஓவரிலேயே ரஹானே வெளியேறியதால், விராட் கோலி களமிறங்கி விரைவாக ரன்கள் சேர்க்க தொடங்கினார். ஆனால் மறுமுனையில் ரோகித் சர்மாவும் பேட்டிங்கில் சொதப்ப, 10.3 ஓவர்களில் இந்திய அணி 64 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் களம் புகுந்தார்.
புற்றுநோய் சிகிச்சைக்கு பின் யுவராஜ் சிங் திரும்பியதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் யுவராஜ் சிங் பேட்டிங் செய்ய வந்த போது, மலிங்கா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். இந்த போட்டியில் தான் மலிங்கா ஒய்டு யார்க்கர் என்று புதிய ஆயுதத்தை டி20 கிரிக்கெட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதற்கு முன்பாக சிலர் ஒய்டு யார்க்கரை வீசியிருந்தாலும், இந்த போட்டியில் மலிங்காவின் ஒய்டு யார்க்கர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
அவரின் ஒய்டு யார்க்கரை சமாளிக்க முடியாமல் யுவராஜ் சிங் தடுமாறினார். ஒரு கட்டத்தில் யுவராஜ் சிங் அவுட்டாக வேண்டும் என்று ரசிகர்களே புலம்ப தொடங்கினார்கள். 18 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த யுவராஜ் சிங் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் கூட அடிக்காமல் 11 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 20 ஓவகளில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்திருந்தது.
இந்த இலக்கை 17.5 ஓவர்களில் இலங்கை எளிதாக சேஸ் செய்து முதல்முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த தோல்விக்கு முதன்மை காரணமாக யுவராஜ் சிங் அமைந்தார். 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் 12 பந்துகளில் அரைசதம் விளாசிய யுவராஜ் சிங், 2014 டி20 உலகக்கோப்பை தொடரில் 21 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹீரோவாக இருந்த யுவராஜ் சிங்கை ரசிகர்கள் பலரும் வில்லனாக விமர்சிக்க தொடங்கினார்கள். இதன்பின் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது.