
இந்தியா vs பாகிஸ்தான்
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 40 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுக்க, இந்தியா 38.2வது ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்து கோப்பையைக் கைப்பற்றியது. இந்த உலகக் கோப்பையில் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற வீரர் ஒருவர் வறுமை காரணமாக குஜராத்தில் காய்கறி விற்பனை செய்தும், கூலி வேலை செய்தும் வருகிறார்.

கட்டிட வேலை
பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்திய இந்திய அணியில் இடம் பெற்றவர் நரேஷ் தும்டா. இவர் குஜராத் மாநிலம், நவ்சாரியைச் சேர்ந்தவர். இந்திய அணிக்காக பல முறை உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, நவ்சாரி பகுதியில் காய்கறிகள் விற்பனை செய்தும், சில நேரங்களில் கட்டிட வேலைக்குச் சென்றும் வாழ்க்கை நடத்தி வருகிறார். அடுத்த உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில் பயிற்சி எடுக்கவும் வழி இல்லாமல், யோசிக்கவும் நேரம் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார். இவருக்கு அரசின் சார்பிலும், பிசிசிஐ சார்பிலும் உதவித்தொகையும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பதிலும் இல்லை, பயனும் இல்லை
இதுகுறித்து நரேஷ் தும்டா அளித்த பேட்டியில், "நான் 2018-ம் ஆண்டு நடந்த பார்வை மாற்றுத்திறனாளி உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தேன். ஆனால், தற்போது கொரோனா வைரஸால் வறுமைக்குத் தள்ளப்பட்டு, தினம் ரூ.250க்கு கூலி வேலைக்குச் செல்கிறேன். சில நேரங்களில் காய்கறி விற்பனை செய்கிறேன். குஜராத் முதல்வரிடம் 3 முறை அரசு வேலை தரக்கோரி வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், எந்தவிதமான பதிலும் இல்லை. பயனும் இல்லை, என்னுடைய குடும்பத்தைக் கவனிக்க எனக்கு அரசாங்கத்தில் ஏதாவது ஒருவேலை தர வேண்டும் என வேண்டுகிறேன்.

பிரதமருக்கு வேண்டுகோள்
உலகக் கோப்பையை வென்று தாயகம் திரும்பியபின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றோம். அனைவரும் எங்களை வாழ்த்தினர். உலகக் கோப்பையை வென்றபின் எப்படியும் எனக்கு ஏதாவது அரசு வேலை கிடைக்கும் என நினைத்தேன். ஆனால், இதுவரை வேலை கிடைக்கவில்லை. என் குடும்பத்தின் நிலைக் கருதி வேலை வழங்க பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று தும்டா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











