வலிமையான அணியாக இந்தியா
சர்வதேச அளவில் வலிமையான அணியாக தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது இடத்திலும் சர்வதேச டி20 போட்டிகளில் 5வது இடத்தில் என அனைத்து பிரிவுகளிலும் முதல் ஐந்து இடங்களில் இடம்பிடித்துள்ளது இந்தியா.
காரணம் சொன்ன விராட் கோலி
டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதல் மற்றும் 2வது இடங்களை பிடித்துள்ள இந்திய அணி, சர்வதேச டி20 போட்டிகளில் மட்டும் 5வது இடத்தில் உள்ளது. இளம் வீரர்களின் திறமைகளை சோதிக்கும் களமாக டி20 உள்ளதால், அதில் முதலிடத்தை பிடிப்பது என்பது சாத்தியப்படாது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.
ரோகித், புஜாராவும் இடம்பிடிப்பு
சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் பேட்டிங் பிரிவில் விராட் கோலி முதலிடத்திலும் புஜாரா 4வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதேபோல ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களை விராட் கோலியும் ரோகித் ஷர்மாவும் பிடித்துள்ளனர். பந்துவீச்சில் ஒருநாள் சர்வதேச போட்டியில் ஜஸ்பிரீத் புஜாரா முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டி பிரிவில் ஆல்ரவுண்டராக ஜடேஜா 2வது இடத்தில் உள்ளார்.
இந்தியா கற்ற பாடம்
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆண்டின் இறுதி தொடரில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 2க்கு ஒன்று என்ற கணக்கில் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. இந்த போட்டியின் மூலம் நமது இந்திய அணியின் பீல்டிங் குறிப்பாக கேட்சிங் மிகவும் மோசமான நிலையில் உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த தொடரில் நாம் தோற்ற போட்டிகளுக்கு நமது வீரர்கள் தவறவிட்ட கேட்ச்களே முக்கிய காரணமாக இருந்தது.
தலைமை தேர்வாளர் தேர்வு
சர்வதேச அளவில் சிறந்த பீல்டராக விளங்கிய தென்னாப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி, ஏற்கனவே பீல்டிங் கோச்சாக இருந்த ஆர். ஸ்ரீதர் அந்த பதவியில் தொடர்கிறார். ஸ்ரீதரின் தலைமையின் கீழ் இந்திய அணியின் பீல்டிங் சிறப்பாக உள்ளதாகவும் அதை தொடரும் முயற்சியில் அவரை மீண்டும் பீல்டிங் கோச்சாக நியமித்துள்ளதாகவும் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்திருந்தார். ஸ்ரீதரின் தலைமையில் பீல்டிங் சிறப்பாக இருந்தபோதிலும் சமீப காலங்களில் அது பொய்யாகி வருகிறது.
முக்கிய பிரச்சினையாக உருமாற்றம்
அடுத்த ஆண்டில் டி20 உலக கோப்பை மற்றும் இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகளுடன் இந்தியா மோதவுள்ளது. இந்நிலையில் உலக அளவில் சிறந்த அணியாக உள்ள இந்தியா தன்னுடைய நிறைகளை பற்றி மட்டுமே மார்தட்டிக் கொண்டிருக்காமல், குறைகளை நிறைவு செய்யும் முயற்சியிலும் தக்க கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகிறது.
டி20 போட்டி தோல்விக்கு முக்கிய காரணம்
மேற்கிந்திய தீவுகள் அணி -இந்தியா மோதிய சர்வதேச டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் ஒரே ஓவரில் இரண்டு கேட்ச்களை விட்டால் எவ்வளவு ரன்களை அடித்தாலும் போதாது என்று விராட் கோலி தெரிவித்திருந்தார். மேலும் பீல்டிங்கில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
17 கேட்ச்களை தவறவிட்ட இந்தியா
கடந்த ஆண்டில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 17 கேட்ச்களை இந்தியா தவறவிட்டுள்ளது. இது அனைத்து வகைகளிலும் என வரும்போது 21 ஆக உயர்ந்து காணப்படுகிறது. பேட்டிங் மற்றும் பௌலிங்கில் தன்னுடைய திறமையை தொடர்ந்து சிறப்பான வகையில் இந்தியா வெளிப்படுத்திவரும் நிலையில், பீல்டிங் குறிப்பாக கேட்சிங்கிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது.
நிபுணர்கள் கோரிக்கை
வலிமையான அணியாக தன்னை நிரூபித்துள்ள இந்திய அணி, தன்னுடைய குறைகளையும் இனம்கண்டு அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதே கிரிக்கெட் நிபுணர்களின் அறிவுறுத்தலாக உள்ளது. கேப்டன் விராட் கோலியும் இதையே தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தலையிட்டு பிசிசிஐ சிறந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதும் அனைவரது கோரிக்கையாக உள்ளது.