அக்.1 முதல் மகளிர் ஆசிய கோப்பை தொடக்கம்.. இந்தியா பங்கேற்கும் போட்டி எப்போது? முழு விவரம்
டாக்கா : மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் டி20 போட்டி வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து மலேசியா, யூஏஇ ஆகிய 7 அணிகள் பங்கேற்கிறது.
யுஏஇ மற்றும் மலேசியா தகுதி சுற்றில் வென்றதை அடுத்து ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

எதிர்பார்ப்பு
இந்திய அணியை பொறுத்தவரை மகளிர் ஆசிய கோப்பை தொடர் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வரலாற்று சாதனை உடன் தற்போது திரும்பி உள்ளது. இதனால் இந்திய மகளிர் அணி மீது எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

எப்படி நடைபெறும்?
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் இந்தத் தொடர் இந்திய மகளிர் அணிக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் ஏழு அணிகள் ரவுண்ட் ராபின் முறைப்படி அவர்களுக்குள் ஒரு முறை மோதிக் கொள்வார்கள். இதில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்தியா அட்டவணை
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் போட்டியில் வங்கதேசம், தாய்லாந்து அணிகள் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா ,இலங்கை அணி மோதுகிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் மூன்றாம் தேதி இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்கிறது .அக்டோபர் நான்காம் தேதி இந்திய அணி , யுஏஇ அணியுடன் பலப் பரீட்சை நடத்துகிறது. அக்டோபர் 7ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

சாதிக்குமா மகளிர் அணி
அக்டோபர் எட்டாம் தேதி இந்திய அணி வங்கதேசத்துடன் பலப் பரிட்சை நடத்துகிறது. அக்டோபர் 10ஆம் தேதி இந்திய அணி தாய்லாந்துடன் எதிர்கொள்கிறது. ஆடவருக்கான ஆசிய கோப்பை டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இறுதி சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது. இதனால் இந்திய ஆடவர் அணி செய்ய முடியாததை மகளிர் அணி செய்து காட்டும் முனைப்புடன் களமிறங்குகிறது.


Click it and Unblock the Notifications