மும்பை : 2023 ஆம் ஆண்டின் ஒரு நாள் போட்டிக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை விராட் கோலி நான்காவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மேலும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா செல்வதற்கு விராட் கோலி முக்கிய பங்கு ஆற்றினார். விராட் கோலி 2023 ஆம் ஆண்டு மட்டும் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1377 ரன்களும் ,ஒரு விக்கெட்டும், 12 கேட்ச்களும் பிடித்திருக்கிறார்.

விராட் கோலி 2022 ஆம் ஆண்டு தன்னுடைய பார்மை மீட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டையை கிளப்பினார்.ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை விராட் கோலி தொட்டார். இதன் மூலம் ஐசிசி 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றார்.
உலகக் கோப்பை போட்டியில் நம்பர் மூன்றாவது வீரராக களம் இறங்கி 11 இன்னிங்ஸில் 9 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார். இதன் மூலம் 765 ரன்கள் உலகக்கோப்பை தொடரில் அவர் அடித்திருந்தார்.இதன் மூலம் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
அந்த தொடரில் விராட் கோலி சராசரியாக 95.62 என்று அளவில் சராசரியும், ஸ்ட்ரைக் ரேட் 90.31 என்று நிலையில் இருந்தார். இதில் மூன்று சதம் அடங்கும் 2023 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் இந்த ரெக்கார்டை அவர் உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் மேற்கொண்டார்.இதுபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் விராட் கோலி அரை சதம் அடித்தார்.
எனினும் இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 சதம், 8 அரை சதமும் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டின் சிறந்த இன்னிங்ஸில் ஒன்றாக உலகக்கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தன்னுடைய 50ஆவது ஒருநாள் சதத்தை அவர் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.