மும்பை : 2023 ஆம் ஆண்டின் சிறந்த t20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இதன் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசியின் இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த 4 வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள்.
எனினும் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா போன்ற வீரர்கள் 2023 ஆம் ஆண்டு எந்த ஒரு டி20 போட்டியிலும் விளையாடாததால் அவர்கள் பெயர் சேர்க்கப்படவில்லை. கடந்த ஆண்டு இந்தியா சார்பாக அறிமுகமான ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

அவர் 14 போட்டிகளில் 430 ரன்கள் குவித்து இருக்கிறார். இதேபோன்று மற்றொரு தொடக்க வீரராக இங்கிலாந்து அணியின் ஃபில் சால்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் மூன்றாவது வீரராக அணியில் இடம் பிடித்திருக்கிறார். நான்காவது வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரனுக்கு இடம் கிடைத்திருக்கிறது.
ஐந்தாவது வீரராக நியூசிலாந்து அணியின் மார்க் சாப்மேணுக்கு இடம் கிடைத்திருக்கிறது. இதேபோன்று ஆறாவது வீரராக ஜிம்பாப்வே அணியின் ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசாவுக்கு இடம் கிடைத்திருக்கிறது. ஏழாவது வீரராக உகாண்டாவின் ஆல்பஸ் ரம்ஜானி மற்றும் 8வது வீரராக மார்க் அதாயிர் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
2023 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ராம்ஜானி மற்றும் அயர்லாந்து ஆல்ரவுண்டர் அதாயிர் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 9வது வீரராக இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்ணாய்க்கு இடம் கிடைத்திருக்கிறது. 10வது வீரராக ஜிம்பாப்வே வீரர் ரிச்சர்ட் நகவராவுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 11வது வீரராக ஆர்ஸ்தீப் சிங் சேர்க்கப்பட்டிருக்கிறார்.