சென்னை : ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணையில் தமிழக ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டிருக்கிறது. 2023 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முக்கிய மைதானத்திற்கும் தலா 5 போட்டிகள் என ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எனினும் சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஒரு போட்டியை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அகமதாபாத்திற்கு மாற்றியது தமிழக ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.

அதன்படி இந்தியா பாகிஸ்தான் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெற முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு காரணம் சென்னை தான் பாகிஸ்தான் வீரர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்றும், இதனால் தங்களுடைய அனைத்து போட்டிகளையும் சென்னை, ஹைதராபாத் ,பெங்களூர் மற்றும் கொல்கத்தாவில் விளையாட பாகிஸ்தான் ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனால் இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டியை சென்னையில் நடத்த முதலில் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தை வைக்க வேண்டும் என ஜெய்ஷா விரும்பினார். இதன் மூலம் அதிக மக்கள் இந்த போட்டியை மைதானத்திற்கு வந்து பார்க்க முடியும் என்றும் இந்த போட்டி நடைபெறுவதால் நரேந்திர மோடி மைதானத்திற்கு பெருமை வந்து சேரும் என்றும் ஜெய்ஷா திட்டமிட்டார்.
ஆனால் இதற்கு பாகிஸ்தான் ஒத்துக் கொள்ளவில்லை. அகமதாபாத்தில் தங்கள் அணிக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அதுவே சென்னை பெங்களூர் என்றால் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. இதனால் பாகிஸ்தானை சமாளிக்க ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் ஹைபிரிட் மாடலில் நடத்த ஜெய்ஷா ஒத்துக் கொண்டார். இதனால் வேறு வழி இன்றி பாகிஸ்தானும் அகமதாபாத்தில் விளையாட ஓகே சொல்லிவிட்டது.
இதனால் சென்னையில் நடைபெற இருந்த இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் தற்போது அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை மைதானத்தில் புணரமைப்பு பணிகள் நடைபெற்றது. இதனால் இந்த மைதானத்தில் சுமார் 50,000 மேற்பட்ட மக்கள் வந்து பார்க்க முடியும். இதன் காரணமாக சென்னையில் அரையிறுதி போட்டி ஒன்றை நடத்த ஐசிசி திட்டமிட்டு இருந்தது. தற்போது அதுவும் சென்னையில் நடைபெறவில்லை. இது தமிழக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.