இந்தியாவை விட்டு செல்லும் உலகக்கோப்பை.. ரூ.900 கோடி இழப்பீடே காரணம்.. கவலையில் ஆழ்ந்த ரசிகர்கள்!
மும்பை: 2023ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்கு செல்வதற்கான அபாயம் உருவாகியுள்ளது.
அடுத்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை இந்தியா தான் வைத்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோற்றதால், சொந்த மண்ணிலாவது கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

2023 உலகக்கோப்பை
இந்நிலையில் இந்தியாவை விட்டே இந்த உலகக்கோப்பை தொடர் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு பாகிஸ்தானுடனான சண்டை காரணம் இல்லை. இந்திய அரசாங்கத்தின் விடாப்பிடி முடிவுகளே காரணம் ஆகும். இந்தியாவில் உலகக்கோப்பைக்கான வரிவிலக்கு பிரச்சினை இருப்பதால் பிசிசிஐ-க்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளது.

பிரச்சினை என்ன
அதாவது ஒருநாட்டில் உலகக்கோப்பை தொடர் நடந்த வேண்டும் என்றால் அந்நாட்டின் அரசு வைத்திருக்கும் வரிகளை கட்ட வேண்டும். எனவே தொகுத்து வழங்கும் வாரியங்கள், தங்களது அரசிடம் கேட்டு வரிவிலக்கை பெற்று தர வேண்டும். ஆனால் பிசிசிஐ-ன் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் இருந்து வருகிறது.

ரூ.900 கோடி இழப்பு
கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவில் தான் டி20 உலகக்கோப்பை நடைபெற்றது. அப்போது வரிவிலக்கு கிடைக்காததால், அதனை ஈடுகட்ட பிசிசிஐ-யிடம் இருந்து ரூ. 190 கோடியை ஐசிசி பெற்றுக்கொண்டது. சம்பந்தபட்ட வாரியம் தான் பொறுப்பு என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் 2023ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை என்றால் ரூ.900 கோடி வரை பிசிசிஐ-யிடம் இருந்து பெற வேண்டியிருக்கும்.

பிசிசிஐ-க்கு நெருக்கடி
ரூ.900 கோடி இழப்பீடு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ள பிசிசிஐ மத்திய அரசிடம் தற்போது இருந்தே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒருவேளை இந்த வரி பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால் அவ்வளவு தொகையை கொடுக்க பிசிசிஐ சம்மதிக்காது. இதனால் வேறு நாட்டிற்கு தொடரை கொண்டு செல்வது தான் ஒரே முடிவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications