லாகூர்: 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்க வாய்ப்பு இல்லாத நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அந்த நேரத்தில் வேறு ஒரு தொடரை நடத்தத் திட்டமிட்டு வருகிறது. அதற்கான முதற்கட்ட வேலைகளையும் துவக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய போர்ப் பதற்றம் தணிந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மோதவிருந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.

2025 ஆசிய கோப்பை இந்தியாவில் தான் நடைபெற இருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி பங்கேற்பதால், இந்த தொடரை நடத்துவதிலிருந்தும், பங்கேற்பதிலிருந்தும் இந்திய கிரிக்கெட் அணி விலகும் என செய்திகள் வெளியாகியிருந்தன. மேலும், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புகளுக்கிடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அதன்படி, இரண்டு நாடுகளின் கிரிக்கெட் அணிகளும் இனி விளையாடும் போட்டிகளை ஒரு பொதுவான இடத்தில் தான் விளையாட வேண்டும் என்ற ஒப்பந்தம் அது. இந்த ஒப்பந்தத்தாலும் பாகிஸ்தான் அணி இந்தியாவில் வந்து ஆசிய கோப்பையில் விளையாட முடியாத நிலை இருக்கிறது.
இதற்கிடையேதான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கோப்பை நடைபெறும் செப்டம்பர் மாதத்தில் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரண்டு ஆசிய கிரிக்கெட் அணிகளை சேர்த்து, முத்தரப்பு கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் துவக்கத்தில் துபாயில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், அந்நாட்டின் அமைச்சர் பதவியிலும் இருக்கும் மொஹ்சின் நக்வி இருக்கிறார். எனவே, ஆசியக் கோப்பை தொடரை நடத்துவது இடியாப்பச் சிக்கலாகவே இருக்கும். இந்தியாவில் அந்த தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளது.
அதே செப்டம்பர் மாதத்தில் பிசிசிஐ மற்றொரு முத்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது. வேறு முன்னணி அணிகளை இந்தியாவிற்கு அழைத்து முத்தரப்பு தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், இதுவரை பிசிசிஐ சார்பில் வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை நடைபெறுமா அல்லது அந்த நேரத்தில் வேறு தொடர் நடத்தப்படுமா என எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.