துபாய்: இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்றுடன் இங்கிலாந்து அணி வெளியேறியதை அடித்து ஜோஸ் பட்லர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணி, அந்தப் பிரிவின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருந்தது. முதலில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வியடைந்த இங்கிலாந்து, அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் தோல்வியடைந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இதை அடுத்து இங்கிலாந்து அணியின் சமீப கால ஆட்டங்களை சுட்டிக் காட்டி பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் உலகின் மோசமான கிரிக்கெட் அணியாக மாறி வருவதாக விமர்சனம் எழுந்தது.
முன்னதாக, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரிலும் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்து இருந்தது. 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையிலிருந்து இங்கிலாந்து அணி விளையாடிய எந்த ஒருநாள் தொடரிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான செயல்பாடுகளின் காரணமாக கேப்டன் ஜோஸ் பட்லர் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருக்கிறார்.
இதுகுறித்து ஜோஸ் பட்லர் பேசுகையில், "நான் இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இதுதான் எனக்கும், எனது அணிக்கும் சரியான முடிவு. பிரெண்டன் மெக்கல்லத்துடன் இணைந்து வேறு ஒருவர் அணியை சரியாக வழிநடத்துவார் என்று நினைக்கிறேன். எனக்கு தற்போது அதிகப்படியாக இருக்கும் உணர்ச்சிகள் - சோகம் மற்றும் ஏமாற்றம் மட்டுமே. காலப்போக்கில் அது கடந்து விடும் என்று நினைக்கிறேன். ஒரு நாட்டின் கேப்டனாக இருப்பது எத்தனை பெரிய கவுரவம் என்பதை வரும் காலத்தில் நான் நிச்சயம் நினைத்துப் பார்ப்பேன்" என்று கூறியிருக்கிறார்.
ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 13 வெற்றிகள் மற்றும் 22 தோல்விகளை சந்தித்துள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் ஜோஸ் பட்லர் 46 போட்டிகளுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அதில் 20 வெற்றிகளும், 23 தோல்விகளும் கிடைத்துள்ளன.