மும்பை : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. ரசிகர்களால் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் இந்த தொடர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது.
இதில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் பிறகு தற்போது 8 ஆண்டுகள் கழித்து இந்த தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணி இந்த தொடரில் பங்கு பெறும்.

அது மட்டுமல்லாமல் பல ஆண்டுகள் கழித்து ஐசிசி தொடர் பாகிஸ்தானில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகின் பல்வேறு இடங்களில் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. எஸ்ஏ 20, தொடர் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கின்றது.
இதைப் போன்று ஐ எல் டி டி20, வங்கதேச பிரிமியர் லீக் போன்ற தொடர்கள் அதே சமயத்தில் தான் நடைபெறுகிறது. இது முடிந்தவுடன் மார்ச் மாதம் இறுதியில் ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது. இதனால் எந்த தொடரும் பாதிக்கப்படாத வகையில் தொடரை பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த தேதிகளில் வேறு எந்த டி20 தொடரையும் நடத்தாமல் பார்த்துக் கொள்ளுமாறு ஐசிசி அறிவித்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் தான் இந்த தொடர் நடைபெறும் என்று ஐசிசி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதன்படி பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடும் வகையில் போட்டிகள் லாகூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
ஒருவேளை இந்தியா பாகிஸ்தானுக்கு வர சம்மதிக்கவில்லை என்றால் ஹைபிரிட் மாடல் படி இந்தியாவில் ஆடும் போட்டிகளை மட்டும் வேறு இடத்திற்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் ஏழு மாதத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் செல்ல அனுமதி அளிக்கப்படுமா என்பது தான் தற்போது கேள்வியாக இருக்கின்றது.