லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலைப் பார்த்தால் அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக தலைகீழாக இருக்கிறது. இந்த புள்ளிப்பட்டியலில் இதுவரை ஐபிஎல் கோப்பையே வெல்லாத மூன்று அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
2025 ஐபிஎல் தொடரின் 13வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து லீக் சுற்றின் புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய மூன்று அணிகள் உள்ளன.

இந்த மூன்று அணிகளும் தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் உள்ளன. நான்காவது இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு புள்ளிகளுடன் உள்ளது.
அடுத்த ஆறு இடங்களில் இருக்கும் அணிகள் அனைத்துமே தலா மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருக்கின்றன. இந்த ஆறு அணிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தவிர மற்ற அணிகள் அனைத்துமே ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள் ஆகும். ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் ஐந்தாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆறாவது இடத்திலும், ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழாவது இடத்திலும் உள்ளன.
தலா ஒரு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளன. 2024 ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி இடமான பத்தாவது இடத்தில் உள்ளது.
2025 ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் சிறப்பாக செயல்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது.
இந்த ஆண்டு முதல் 13 லீக் போட்டிகளின் முடிவில் இதுவரை கோப்பையே வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்த மூன்று அணிகளும் தங்களின் அடுத்த மூன்று அல்லது நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.