மும்பை: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் இதற்கு முன் நான்கு அணிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது நியூசிலாந்து அணி ஐந்தாவதாக நுழைந்து உள்ளது. இதன் மூலம் இந்திய அணியின் இறுதிப் போட்டி வாய்ப்பு சற்று அதிகரித்து இருக்கிறது.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 - 0 என வென்றதன் மூலம் நியூசிலாந்து அணிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட ஐந்து அணிகள் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை வைத்துள்ளன. இந்த ஐந்து அணிகளுக்கு எத்தனை போட்டிகள் மீதம் உள்ளன? அவற்றில் எத்தனை போட்டிகளில் வென்றால் எந்த சிக்கலும் இன்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறலாம்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதம் உள்ளன. இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளிலும், இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. அந்த 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றால் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம்.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு இன்னும் ஐந்து போட்டிகள் மீதம் உள்ளன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 4 வெற்றிகள் மற்றும் ஒரு டிரா செய்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு எந்த சிக்கலும் இன்றி முன்னேறலாம்.
இலங்கை அணிக்கு 4 போட்டிகள் மீதம் உள்ளன. அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் விளையாட உள்ளது இலங்கை. அந்த நான்கு போட்டிகளையும் வென்றால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.
நியூசிலாந்து அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதம் உள்ளன. இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது நியூசிலாந்து. அந்த மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் மீதம் உள்ளன. இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா விளையாட உள்ளது. அந்த நான்கு போட்டிகளையும் வென்றால் தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.
இந்த ஐந்து அணிகளுமே தாங்கள் ஆடும் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. குறிப்பாக இலங்கை, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் தங்களுக்கு மீதம் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளன. அந்த மூன்று அணிகளும் நிச்சயம் சில போட்டிகளில் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது.
அப்படி நடந்தால் இந்தியாவுக்கான இறுதிப் போட்டி வாய்ப்பு சற்று அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆஸ்திரேலிய அணி தனக்கு மீதமுள்ள 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. ஒருவேளை ஆஸ்திரேலியா அணி மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட போட்டிகளில் தோல்வி அடைந்தால் அதுவும் இந்திய அணிக்கு சாதகமாக மாறும்.
எனவே, இந்திய அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. ஆனால், மற்ற அணிகளின் தோல்விகளை பொறுத்தே இந்திய அணியின் வாய்ப்பு அதிகரிக்கும்.