புனே: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பின்பும் இந்திய அணி முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் பெரிய சிக்கல் எழுந்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, இரண்டாவது போட்டியையும் வென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என கைப்பற்றி உள்ளது.

இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 62.80 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா 62.50 சதவீதத்துடன் உள்ளது. முதல் இடத்தில் இருந்தாலும் இந்திய அணிக்கு இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மீதமுள்ள போட்டிகளை வைத்துப் பார்க்கும் போது இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது மிகவும் கடினமானதாக மாறி உள்ளது.
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம் பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். அதற்கு 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மீதமுள்ள ஆறு டெஸ்ட் போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.
ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் முதல் இரண்டு இடங்களை பிடிக்க போட்டி போட்டு வருகின்றன. இந்திய அணி அடுத்து நியூசிலாந்து அணிக்கு கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் விளையாட உள்ளது.
இந்த ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில் இந்தியா வெல்வது என்பது மிகவும் கடினமான விஷயம் ஆகும். எனவே இந்திய அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது கடினமானதாக மாறி இருக்கிறது.