மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்தியா வந்து விளையாடுவது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கும் (BCB), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் (ICC) இடையே பனிப்போர் முற்றியுள்ளது. "பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் விளையாட முடியாது" என அடம் பிடித்த வங்கதேசத்திற்கு, "இந்தியாவிற்கு வந்து விளையாடுங்கள், இல்லையென்றால் புள்ளிகளை இழக்க நேரிடும்" என ஐசிசி கறாராக தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026ம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இதில் குரூப்-சி பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேச அணி, தனது லீக் ஆட்டங்களை இந்தியாவின் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாட திட்டமிடப்பட்டு இருக்கிறது.

ஆனால், இந்தியாவில் விளையாடுவது தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், தங்கள் அணி விளையாடும் போட்டிகளைப் பொதுவான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி-க்கு கோரிக்கை விடுத்திருந்தது.
'ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ' வெளியிட்டுள்ள செய்தியின்படி, செவ்வாய்க்கிழமை நடந்த காணொளி ஆலோசனைக் கூட்டத்தில், வங்கதேசத்தின் இந்தக் கோரிக்கையை ஐசிசி திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. மேலும், "உலகக் கோப்பை போட்டிகளுக்காக இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அந்தப் போட்டிகளுக்கான புள்ளிகளை இழக்க நேரிடும் " என்று ஐசிசி எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தத் தகவலை மறுத்துள்ளது. ஐசிசி தரப்பிலிருந்து தங்களுக்கு அப்படி எந்தவிதமான இறுதி எச்சரிக்கையும் வரவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
திடீரென வங்கதேசம் இந்தியா வர மறுப்பதற்கும், ஐபிஎல் (IPL) தொடருக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி ரூ. 9.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இந்த ஏலத்தில் வாங்கப்பட்ட ஒரே வங்கதேச வீரர் இவர்தான்.
ஆனால், பிசிசிஐ (BCCI) செயலாளர் தேவ்ஜித் சைகியா, முஸ்தபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கொல்கத்தா அணி நிர்வாகத்திற்குத் திடீர் உத்தரவு பிறப்பித்தார். இதற்கான சரியான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இது வங்கதேச கிரிக்கெட் வாரியத்தைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பத் தடை விதிப்பதாக வங்கதேச அரசு அறிவித்தது. இதன் தொடர்ச்சியாகவே, தற்போது பாதுகாப்பு காரணங்களைக் காட்டி உலகக் கோப்பைக்காக இந்தியா வரவும் வங்கதேசம் தயக்கம் காட்டி வருகிறது.
வங்கதேச அணி தனது முதல் மூன்று போட்டிகளை கொல்கத்தாவில் விளையாட உள்ளது:
பிப்ரவரி 7: வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் - இடம்: கொல்கத்தா
பிப்ரவரி 9: வங்கதேசம் - இத்தாலி - இடம்: கொல்கத்தா
பிப்ரவரி 14: வங்கதேசம் - இங்கிலாந்து - இடம்: கொல்கத்தா
பிப்ரவரி 17: வங்கதேசம் - நேபாளம் - இடம்: மும்பை
வங்கதேச அணியின் கடைசி உலகக்கோப்பை லீக் ஆட்டம் பிப்ரவரி 17 அன்று மும்பையில் நேபாளத்திற்கு எதிராக நடைபெறவுள்ளது. போட்டிகள் தொடங்க குறுகிய காலமே உள்ள நிலையில், பிசிசிஐ அல்லது ஐசிசி இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிக்கையை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி-யின் இந்த அதிரடி முடிவால் வங்கதேச அணி இந்தியா வருமா அல்லது போட்டிகளைப் புறக்கணிக்குமா என்பது கிரிக்கெட் உலகில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.