
மொத்தம் 31 உறுப்பினர்கள் பொதுக்குழுவில் உள்ளனர். ஒருவருக்கு வாழ்நாள் தடை விதிக்க குறைந்தது 21 பேரின் ஆதரவு தேவை. அந்த ஆதரவு ஈஸியாக கிடைத்து விட்டதால், லலித் மோடிக்கு தடை விதிப்பது ரொம்பவே எளிதாக அமைந்து போனதாம்.
நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்களின் பேரில் லலித் மோடி குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சாலி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்திருந்தது பிசிசிஐ. அந்த விசாரணையில் மோடி மீதான புகார்கள் நிரூபணமாவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மோடிக்கு வாழ்நாள் தடை விதிக்க தீர்மானித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். ஆனால் இதை அறிவிக்கக் கூடாது, சிறப்புக் கூட்டத்திற்குத் தடை போட வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார் மோடி. ஆனால் அங்கு அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று திட்டமிட்டபடி பிசிசிஐ கூட்டம் கூடியது. கடைசி நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார் மோடி. ஆனால் சுப்ரீம் கோர்ட்டி்ல அவருக்கு குட்டுதான் கிடைத்தது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டபடி கூடி மோடிக்கு வாழ்நாள் தடை விதித்தது.
மொத்தம் உள்ள 31 பேரில் மூன்றில் இரண்டு பங்குப் பேர் அதாவது 21 பேரின் ஆதரவு இருந்தால்தான் ஒருவரை நீக்க முடியும், தடை விதிக்க முடியும். அந்த ஆதரவு சீனிவாசன் புண்ணியத்தால் எளிதாக கிடைத்து விட்டதாம். காரணம், லலித் மோடி மீது அவ்வளவு காட்டமாக இருந்தார் சீனிவாசன்.
ஒரு காலத்தில் இருவரும் அப்படி ஒரு நெருக்கமான நட்பில் இருந்தவர்கள். ஆனால் அந்த நட்பு பின்னர் காணாமல் போய் விட்டது. சமீபத்தில் கூட, இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக மீண்டும் சீனி வந்தால் இந்திய கிரிக்கெட் நாசமாகிப் போய் விடும் என்று சபித்திருந்தார் மோடி.
ஆனால் அவருக்கு வாழ்நாள் தடை விதித்து சரியான பதிலடி கொடுத்து விட்டார் சீனிவாசன். இன்றைய கூட்டம் அவரது தலைமையில்தான் நடந்தது என்பது நினைவிருக்கலாம்.