மான்செஸ்டர் : உலக கிரிக்கெட்டில் தற்போது ஆக்கிரமித்து இருக்கும் வார்த்தை என்றால் அது பேஷ்பால் தான். டெஸ்ட் கிரிக்கெட் என்றால் மெதுவாக விளையாட வேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்து, அதிரடியாக ஆடி ரன்களை இங்கிலாந்து வீரர்கள் சேர்த்து வருகிறார்கள்.
ஆனால், இப்படிப்பட்ட முறையை கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன், செய்திருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், கிரிக்கெட்டின் பிதாமகனான பிராட்மேன், அவருடைய காலத்தில் அதிக ரன்களை அடித்தவர், அதிக சதம் அடித்தவர் என்ற பல சாதனையை படைத்திருந்தார்.
அந்த சாதனை எல்லாம தற்போது முறியடிக்கப்பட்டாலும், பிராட்மேனின் ஒரு சாதனையை மட்டும் எந்த கொம்பனாலும் அருகில் கூட வர முடியவில்லை. அது தான், கிரிக்கெட்டில், அதிக சராசரி வைத்திருக்கும் சாதனை. பிராட்மேனின் சராசரி 99.94 என்ற அளவில் இருக்கிறது. எந்த மாதிரி பந்துவீச்சாக இருந்தாலும், ஆடுகளமாக இருந்தாலும் சரி பிராட்மேன் வேகமாக விளையாடி ரன் குவிப்பாராம்.

அவ்வளவு ஏன் டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிரான 1930ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரே நாளில் முச்சதத்தை பிராட்மேன் அடித்திருக்கிறார். இந்த சாதனையை இன்னும் யாராலும் முறியடிக்க முடியவில்லை. இவ்வளவு வேகமாக ரன் சேர்க்க, அவர் அந்த காலத்தில் எப்படி விளையாடி இருப்பார்?
இந்த டி20 கிரிக்கெட் காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு செஷனில் ஒரு அணி 100 ரன்களை சேர்த்தால், அதனை நாம் சாதனையாக பேசுகிறோம். ஆனால் பிராட்மேன், ஒரு செஷனில் ஒரு சதத்தை பூர்த்தி செய்துவிடுவார். 1938ஆம் ஆண்டில் ஆஷஸ் தொடரின் போது இதே நாளில் லாங்கசையர் அணிக்கு எதிராக பிராட்மேன் சதம் அடித்திருக்கிறார். இதனை அவர் 77 நிமிடத்தில் பூர்த்தி செய்திருக்கிறார். இதன் மூலம் , ஆஸ்திரேலிய அணி, லாங்கசையர் அணிக்கு 299 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இப்படி பிராட்மேன் ஆடிய ஆட்டத்தை தான் பிற்காலத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின், சேவாக், டிவில்லியர்ஸ், கெயில் எல்லாம் ஆடி இருக்கிறார்கள். ஆனால், சச்சினின் ஆட்டத்தை பார்த்து தான் பிராட்மேன், தன் மனைவியிடம் இந்த பையன் விளையாட்றதை பார்க்கும் போது, எனக்கு என் ஆட்டத்தை பார்ப்பது போல் இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறாராம்.