இந்திய- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி டெல்லியில் தொடங்கியுள்ளது. டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள மே.இந்திய தீவுகள் அணி, இந்தியாவுடன் 5 ஒருநாள், 1டி20, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. கொச்சியில் கடந்த 8ம்தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக பிற்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது. முன்னதாக, டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் டோணி தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
டெல்லி கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு, அணி நிர்வாகத்துடன் ஊதியப் பிரச்சனை உள்ளிட்டவை இருந்தாலும், பேட்டிங்க்கு சாதகமான கொச்சி மைதானத்தில் அபாரமாக விளையாடி, 321 ரன்கள் குவித்தனர். மேலும் பந்து வீச்சாளர்கள் இந்திய அணியை 200 ரன்களுக்குள் சுருட்டினர்.
இதனால், 2வது ஒருநாள் போட்டியில் வெல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. அப்போதுதான் ஒருநாள் தொடரை வெல்வவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
இதனிடையே இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் மோகித் ஷர்மா காயம் காரணமாக விளையாடவில்லை, அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் களமிறங்குகிறார். மே.இந்திய தீவுகள் அணியில் எந்த மாற்றமும் இல்லை.