கொழும்பு: இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரின் இந்தியா, வங்கதேசம் மோதும் இரண்டாவது டி-20 போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும். இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும்.
இலங்கையின் 70வது சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது.இதற்கு நிதாஸ் கோப்பை போட்டி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
முதல் போட்டியில் இந்தியா இலங்கையிடம் தோற்றது. அதன் பின் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றது. அதற்கு அடுத்த இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வென்றது. கடைசியாக நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றது.
இதனால் புள்ளிகள் பட்டியில் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா முதலிலும், இலங்கை இரண்டாவதும், வங்கதேசம் கடைசி இடத்திலும் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது வங்கதேசத்துக்கு எதிராக இன்று இந்தியா விளையாடும் இரண்டாவது டி-20 போட்டி நடந்து இருக்கிறது.
இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச முடிவெடுத்தது.
முதலில் இறங்கிய இந்தியா அதிரடியாக ஆடியது. ரோஹித் 89, தவான் 35, ரெய்னா 47 ரன்கள் எடுத்தனர். இதனால் 20 ஓவரில் இந்தியா 176 ரன்கள் எடுத்தது.
வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் எடுத்தார். சரத்துள் தாக்குர், சிராஜ், சாஹல் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் வங்கதேசம் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக வென்றது.