திருவனந்தபுரம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தோனி பற்றி பேசும் போது அவர் பெயரை சொல்ல மறுத்துவிட்டார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா முதல் போட்டியில் வென்ற நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 235 ரன்கள் குவித்தது. மூன்று வீரர்கள் அரைசதம் அடித்தனர். ரிங்கு சிங் கடைசி 2 ஓவர்களில் இறங்கி 9 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு பின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில் ரிங்கு சிங் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடியது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது அதற்கு பதில் அளித்த சூர்யகுமார் யாதவ், "ரிங்கு சிங் கடந்த போட்டியில் பேட்டிங் ஆடியதை பார்த்தேன். அவர் காட்டிய நிதானம் அற்புதமாக இருந்தது. அது எனக்கு ஒரு தலைசிறந்த வீரரை நினைவூட்டியது." எனக் கூறி சிரித்தார். ஆப்போது அவரிடம், "அது யார் என சொல்ல முடியுமா?" என கேள்வி கேட்கப்பட்டது. அப்போதும் அதை சொல்ல மறுத்த சூர்யகுமார், "அது யார் என்று அனைவருக்கும் தெரியும்" என்று மட்டும் கூறினார்.
ரிங்கு சிங் பேட்டிங் ஆடும் விதம் தோனி போல இருப்பதாக பலரும் பேசத் துவங்கி உள்ளனர். குறிப்பாக கடைசி ஓவர்களில் இறங்கினாலும் எந்த பதற்றமும் இன்றி நிதானமாக அவர் சிக்ஸ், ஃபோர் அடிப்பதை பார்த்தால் தோனியின் இளமைக் காலம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
அதை குறிப்பிட வந்த சூர்யகுமார் யாதவ், ஒரு கேப்டனாக இளம் வீரரை தோனியுடன் ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்காது என்பதால் தோனி பெயரை சொல்வதை தவிர்த்து விட்டார். அதே சமயம், ரிங்கு சிங்கையும் பாராட்டி இருக்கிறார்.