டோணி சொந்த மண்ணில் வெற்றி பாதைக்கு திரும்புமா இந்தியா? இலங்கையுடன் இன்று 2வது மோதல்
ராஞ்சி: ராஞ்சியில் இன்றிரவு நடக்கும் இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. முந்தைய தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.
3 டி20 போட்டிகள் ஆடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை இடையிலான 2வது 20 ஓவர்போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 101 ரன்களில் சுருண்டதுதான் தோல்விக்கு காரணம். எனவே இந்த ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையாக ஆடுவார்கள் என்று நம்பலாம்.
இந்திய அணியில் அனேகமாக ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான பவான் நேகி அறிமுக வீரராக இறக்கப்படலாம். இவர் நடப்பு ஐபிஎல் ஏலத்தில், டெல்லி அணிக்காக ரூ.8.5 கோடிக்கு வாங்கப்பட்ட வீரராகும்.
இன்றைய போட்டி இந்திய கேப்டன் டோணியின் சொந்த ஊரில் நடைபெறுகிறது. இங்கு சர்வதேச 20 ஓவர் போட்டி அரங்கேற இருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே ஆடுகளத்தை கணிக்க முடியாது.
எஞ்சிய இரு ஆட்டத்தில் வென்றால் மட்டுமே 20 ஓவர் அணிகளின் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தை தக்க வைக்க முடியும் என்ற நெருக்கடியில் இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்.
இலங்கை அணியை பொறுத்தவரை முதலாவது ஆட்டத்தில் கிடைத்த எதிர்பாராத வெற்றியால் புது உத்வேகம் அடைந்துள்ளனர். கையில் ஏற்பட்ட காயத்தால் தொடக்க ஆட்டத்தில் விளையாடாத மூத்த வீரர் தில்ஷன் இன்று களம் காணுவது அவர்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Click it and Unblock the Notifications