
முதல் நாளில் 319 ரன்கள்
டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ராகுல் சதம் உதவியுடன், நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 19 ரன்களுடன் சாஹாவும், அஸ்வினும் இன்று ஆட்டத்தை தொடங்கினர்.

சாஹா அரை சதம்
அஸ்வின் 2 ரன்களில் வெளியேறினாலும், அமித் மிஸ்ரா 24 ரன்கள் எடுத்து சாஹாவுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தார். சிறப்பாக ஸ்பின் பந்துகளை எதிர்கொண்ட சாஹா, அரை சதம் கடந்து 56 ரன்களில் அவுட் ஆனார். காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் சாஹா அரை சதம் அடித்திருந்தார்.

393 ரன்களுக்கு ஆல் அவுட்
உணவு இடைவேளை முடிந்து போட்டி ஆரம்பித்த அரை மணி நேரத்திற்குள் இந்தியா 393 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. உமேஷ் யாதவ் 2 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

இலங்கை பந்து வீச்சு
இலங்கை தரப்பில் இடது கை லெக் ஸ்பின்னர் ரங்கனா ஹீரத் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். வேகப்பந்து வீச்சாளர்களான தம்மிகா பிரசாத், ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் துஷ்மந்தா சமீரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆப்-ஸ்பின்னர் தரிந்து குஷால் 111 ரன்களை விட்டுக்கொடுத்த போதிலும் விக்கெட் கிடைக்கவில்லை.

சங்ககாராவுக்கு வரவேற்பு
இதையடுத்து இலங்கை தனது முதல் இன்னிங்சை ஆடுகிறது. 1 ரன்னுக்கே கருணரத்னே விக்கெட்டை இழந்தது இலங்கை. இதையடுத்து களமிறங்கிய இப்போட்டியுடன் ஓய்வு பெற உள்ள சங்ககாராவுக்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு கொடுத்தனர். இந்திய வீரர்களும் அணிவகுத்து நின்று மரியாதை கொடுத்தனர். சங்ககாரா 32 ரன்களில் அஸ்வின் பந்தில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

3 விக்கெட்டுகள்
ஆட்ட நேர இறுதியில், இலங்கை 140 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. குசால் சில்வா அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். திரிமன்னே 28 ரன்களுடனும், கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 19 ரன்களுடனும் களத்திலுள்ளனர். இந்திய தரப்பில் உமேஷ் யாதவ், அஸ்வின், அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இலங்கை 253 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் நாளை 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Click it and Unblock the Notifications