பெங்களூர்: பெங்களூரில் நடந்து வரும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் மழை காரணமாக இன்று கைவிடப்பட்டது.
இன்று காலையிலிருந்து மழை பெய்து வந்ததால் இன்றைய ஆட்டத்தை நடத்துவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு பிற்பகல் 2 மணியளவில் நடுவர்கள் வந்தனர். இதையடுத்து 2வது நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக காலை 10.30 மணியளவில் ஆட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வானம் கை கொடுக்கவில்லை. இதனால் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இப்படியாக ஒத்திவைக்கப்பட்டு வந்த ஆட்டம் கடைசியாக 2. மணியளவில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் முதல் நாளான நேற்று தென் ஆப்பிரிக்கா 214 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவன் 45 ரன்களுடனும், முரளி விஜய் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.