இங்கிலாந்து அபார வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து இந்த தொடரில் இங்கிலாந்து 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நேற்றைய போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணம் பவர்ப்ளேயில் விராட் கோலியை தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தாததுதான்.
1 ரன் அடித்த ராகுல்
இந்த தொடரின் 3 போட்டிகளிலும் சேர்த்து 1 ரன் மட்டுமே எடுத்துள்ளார் கேஎல் ராகுல். இதையடுத்து அவருடைய பார்ம் குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே மூன்று முறை தொடர்ந்து தோல்வியடைந்து விட்டால் எதுவுமே மாறிவிடாது என்று இந்தியாவின் பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
உண்மை மாறிவிடாது
இந்த தோல்வி மூலம் இந்தியாவின் சிறப்பான டி20 பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் என்ற உண்மை மாறிவிடாது என்றும் அவர் கூறியுள்ளார். டி20 வடிவத்தில் ராகுலின் சராசரி 40க்கும் மேற்பட்டு உள்ளதையும் ஸ்டிரைக் ரேட் 145க்கு மேல் உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ள ரத்தோர், கடந்த ஆண்டுகளில் ராகுல் சிறப்பாக விளையாடியதை மறந்துவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
கைகொடுக்க வேண்டும்
இந்த நெருக்கடி நேரத்தில் ராகுலுக்கு நாம் அனைவரும் குழுவாக ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ராகுல் மீண்டும் மீண்டு வருவார் என்றும் ரத்தோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் டி20 உலக கோப்பை தொடரை முன்னிட்டு, இந்த தொடரில் பல்வேறு ஆப்ஷன்களையும் முயற்சித்து பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.