இந்திய அணி தோல்வி
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டெவோன் கான்வே மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் அரைசதம் அடித்து உதவினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் முன்னணி வீரர்கள் அனைவரும் சொதப்பினர். சூர்யகுமார் 47, வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் அடித்த போதும் 20 ஓவர்களில் 155/9 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.
முக்கிய காரணங்கள்
இந்நிலையில் இந்தியாவின் இந்த தோல்விக்கு 3 முக்கிய காரணங்கள் உண்டு. முதல் காரணம் பிட்ச்-ல் ஏற்பட்ட மாற்றம் தான். ராஞ்சியில் 2வது இன்னிங்ஸின் போது அதிகப்படியாக பனிப்பொழிவு இருக்கும். இதனால் பந்துவீச சிரமமாகி பேட்டிங் சுலபமாகும். ஆனால் எதிர்பாராத விதமாக பனிப்பொழிவு தாக்கம் ஏற்படுத்தவில்லை. முதல் ஓவரில் இருந்தே பந்து நன்கு டேர்ன் ஆனதால்,எதிரணி ஸ்பின்னர்களிடம் இந்திய பேட்டர்கள் சரணடைந்தனர்.
பிட்ச்-ன் ட்விஸ்ட்
2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவு இருக்கும் என நினைத்து தான் பந்துவீச்சை தேர்வு செய்தேன். ஆனால் பிட்ச்-ல் டேர்ன் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்ததாக ஹர்திக் பாண்ட்யா கூறியிருந்தார். இதே போல நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னரும் ஒப்புக்கொண்டார். அது, எங்களுக்கே ஆச்சரியமாக தான் இருந்தது. எனினும் பவர் ப்ளேவில் நல்ல டேர்ன் இருந்ததால் அடுத்தடுத்து ஸ்பின்னர்களை பயன்படுத்தி விக்கெட் எடுத்தோம் எனக்கூறினார்.
கடைசி ஓவர்
தோல்விக்கு 2வது காரணம் அர்ஷ்தீப் சிங் தான். இந்த களத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 155 - 160 ரன்கள் தான் ஆகும். அதற்கேற்றார் போலவே நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 149/6 என இருந்தனர். ஆனால் 20 ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், நோ பால் வீசியதோடு மட்டுமல்லாமல் 6 சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 27 ரன்களை வாரி வழங்கினார். இதனால் ஸ்கோர் 176க்கு சென்றுவிட்டது. ஒருவேளை இந்த ஓவரில் தவறு நடக்காமல் இருந்திருந்தால் இந்தியா வென்றிருக்கலாம். ஏனென்றால் இந்தியா அடித்த ஸ்கோர் 155 ஆகும்.
ஹூடாவின் தவறான முடிவு
3வது தவறு தீபக் ஹூடா செய்தது ஆகும். 16 ஓவர்களில் டாப் ஆர்டர் அனைத்தும் சரிந்த போது வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக ஆடி வந்தார். அப்போது களமிறங்கிய ஹூடா சற்று நிதானம் காட்டியிருக்க வேண்டும். மிட்செல் சாண்ட்னர் 3 ஓவர்களில் 7 ரன்கள் தான் விட்டுக்கொடுத்துள்ளார் என்ற போது, அவர் சிங்கிள் அடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த ஓவர் முழுக்க தூக்கி அடிக்க நினைத்து மிகவும் மோசமாக அவுட்டாகி வெளியேறினார். அந்த ஓவரை மட்டும் கடந்திருந்தால் அதன்பின் வந்த வேகப்பந்துவீச்சாளர்களை அடித்து ஆடியிருக்கலாம்.