மும்பை : டி20 உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையிலும், 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலும் இந்த சாதனையை இந்தியா படைத்திருக்கிறது.
இந்த சூழலில் டி20 போட்டிகளில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் இருந்துள்ளது. தோனி பெரும் சகாப்தத்தை படைத்துள்ள நிலையில், ரோகித் சர்மாவும் தற்போது 5 ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை என தோனிக்கு சரிசமமாக சாதனை செய்திருக்கிறார்.

இந்த நிலையில் தோனி, விராட் கோலி ,ரோகித் சர்மா ஆகிய மூன்று கேப்டன்ஷி ஸ்டைல் குறித்து தினேஷ் கார்த்திக் பேசியிருக்கிறார். அது குறித்து தற்போது பார்க்கலாம். ரோகித் சர்மாவின் கேப்டன்ஷி மிகவும் வித்தியாசமானது. ரோகித் நுணுக்க விவரங்கள் குறித்து ஆழ்ந்த கவனம் செலுத்துகின்ற கேப்டனாக செயல்படுகிறார். ஆனால் தோனி உள்ளுணர்வை மட்டுமே நம்பும் கேப்டனாக இருக்கிறார்.
தோனிக்கு திட்டமிடுதல் என்பது குறித்து பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. ஆனால் விராட் கோலி கேப்டன்ஷி பட்டாசு போல் இருக்கும். அவர் எப்போதுமே எதிரணியின் முகத்திற்கு சென்று சவால்களை கொடுக்கும் கேப்டனாக இருந்துள்ளார். ஆனால் ரோகித் சர்மா களத்தில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் களத்தில் செயல்படுவார்.
ரோகித் சர்மாவுக்கு எந்த வீரர் மீது நம்பிக்கை இருக்கிறதோ,அவருக்கு தன் முழு ஆதரவையும் வழங்குவார். தொடர்ந்து பல போட்டிகளில் வாய்ப்பு வழங்குவார். இதன் மூலம் ஒட்டுமொத்த வீரர்களும் ரோகித் சர்மா மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு ரோகித்துக்காக விளையாடுவார்கள்.
அதே சமயம் டிராவிட்டின் பங்கு ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மாவை சிறந்த வீரர்கள் என்று பாராட்டியுள்ள தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை வென்ற பிறகு இருவரும் ஓய்வு பெற்று இருப்பது மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கூறியுள்ளார்.