குயானா: ஒவ்வொரு முறையும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது இந்திய வீரர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். கடந்த முறை சுற்றுப்பயணம் சென்ற போது, வீரர்களின் லக்கேஜ் வராமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இம்முறை டெஸ்ட் தொடர் முடித்து ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய அணி புறப்பட்டது.
அப்போது இரவு நேரத்தில் விமான டிக்கெட்டுகள் புக் செய்யப்பட, விமானம் புறப்பட 5 மணி நேரம் தாமதமானது. இதனால் இந்திய அணி வீரர்கள் சுமார் 5 மணி நேரம் தூக்கத்தை கெடுத்து விமான நிலையத்திலேயே அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, அடுத்த முறை சுற்றுப்பயணம் வரும் போது சில அடிப்படை தேவைகளையாவது செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கோரிக்கைகள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வெஸ்ட் கிரிக்கெட் வாரியம் புதிய அதிர்ச்சியை இந்திய அணிக்கு கொடுத்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில் விளையாடுவதற்காக இரு அணி வீரர்களும் மைதானத்தில் களமிறங்கிய போது, வழக்கமாக மைதானங்களில் அமைக்கப்பட்டிருக்கும் 30 யார்டு உள்வட்டத்தை காணவில்லை.
இதுகுறித்து கேட்ட போது தான், 30 யார்டு உள்வட்டத்தை வரைய மறைந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இரு அணி வீரர்களும் மீண்டும் ஓய்வறைக்கு திரும்பினர். இதனால் ஆட்டம் தொடங்குவதிலேயே தாமதம் ஏற்பட்டது. 30 யார்டு உள்வட்டத்தை கணக்கிட்டே வீரர்களின் ஃபீல்டிங் பொசிஷன்கள் முடிவு செய்யப்படும்.
அதேபோல் பவர் பிளே ஓவர்களுக்குள் எத்தனை வீரர்கள் உள்ளே இருக்க வேண்டும், பவர் பிளே ஓவர்களுக்கு பின் எத்தனை ஃபீல்டர்கள் வெளியில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். அந்த 30 யார்டு வட்டத்தையே வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் மறந்துள்ளது. இப்படியான வரலாற்று தவறுகள் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இதுபோன்ற சாதாரணமான விஷயங்களில் கூட பிரச்சனையை உருவாக்குவது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.