அகமதாபாத்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடக்கும் அகமதாபாத் மைதானத்தின் பிட்ச் குறித்து அதன் பராமரிப்பாளர் பேட்டி அளித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளன. இந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள நிலையில், 1.35 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்க்கவுள்ளனர். இந்த போட்டியில் வெற்றிபெற இரு அணிகளின் வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று மாலை அகமதாபாத் மைதானத்தில் இந்திய அணி வலை பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, அகமதாபாத் பிட்சை நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் இந்திய அணி நிர்வாகிகளும் இருந்தனர். இதனால் இந்திய அணி தரப்பில் பிட்சிற்கு ஏற்ப திட்டங்கள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஐசிசி பிட்ச் ஆலோசகர் ஆண்டி அட்கின்சன், உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக சொந்த ஊர் சென்றுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ தரப்பில், ஐசிசி பிட்ச் ஆலோசகர் ஆண்டியின் பணிகள் முடிவடைந்துவிட்டது. அவர் சொந்த ஊர் திரும்பியதை சர்ச்சையாக்க வேண்டாம். உலகக்கோப்பை முடியும் வரை ஐசிசி பிட்ச் ஆலோசகர் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரையிறுதி போட்டியில் ஸ்லோ பிட்ச்-ஆக கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. தற்போது ஆண்டி அட்கின்சன் முன்னதாக சொந்த ஊர் திரும்பியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அகமதாபாத் பிட்ச் பராமரிப்பாளர் அளித்துள்ள பேட்டியில், உலகக்கோபை இறுதிப்போட்டிக்கு புதிய பிட்ச் பயன்படுத்தப்படுமா அல்லது ஏற்கனவே விளையாடிய பிட்ச் பயன்படுத்தப்படுமா என்பதை கூற முடியாது.
ஒருவேளை அதிக எடையுள்ள ரோலர் கறுப்பு மண் கொண்ட பிட்சில் பயன்படுத்தப்பட்டால், பிட்ச் நிச்சயம் ஸ்லோவாக மாறும். இதனால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியும் என்றாலும், ரன்கள் சேர்ப்பது எளிதாக இருக்காது. முதல் பேட்டிங் செய்யும் 315 ரன்கள் சேர்த்தால், நிச்சயம் டிஃபெண்ட் செய்ய முடியும். ஆனால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி ரன்கள் சேர்ப்பது கடினமானது என்று தெரிவித்துள்ளார்.