அடிலெய்டு: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நடுவே நடைபெற உள்ள 3வது டி20 கிரிக்கெட் போட்டி, இளஞ்சிவப்பு வண்ண பந்து கொண்டு ஆடப்பட உள்ளது. ஆஸி. முன்னாள் வீரர் கிளன் மெக்ராத் நடத்திவரும் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் நோக்கத்தில், இந்த ஆட்டம் நடைபெற உள்ளது.
மெக்ராத் தனது மறைந்த மனைவி, ஜேன் பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை, மார்பக புற்றுநோய் சிகிச்சைகளுக்கு உதவுகிறது.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆகும் செலவீனங்களை சமாளிக்க நிதி திரட்டுகிறார் மெக்ராத். சமீபத்தில் முடிந்த ஆஸி.-மே.இ.தீவுகள் அணிகளுக்கு நடுவே சிட்னியில் நடந்த, டெஸ்ட் போட்டியில் வசூலாகும் தொகையை மெக்ராத் அறக்கட்டளைக்கு அளிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது. இதற்கு அடையாளமாக அந்த டெஸ்ட் போட்டி பிங்க் வண்ண பந்தில் ஆடப்பட்டது.
வசூல் அதிகரிக்கும் 3வது நாளில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. எனவே 25 லட்சம் டாலர்களை மட்டுமே அந்த டெஸ்ட் போட்டி, வசூலிக்க முடிந்தது. எனவே, சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் டாலர்களை வசூலிக்கும் நோக்கில், இந்தியா-ஆஸ்திரேலியா நடைவேயான 3வது டி20 போட்டியில் வசூலாகும் தொகையை மெக்ராத் அறக்கட்டளைக்கு அளிக்க ஆஸி. வாரியம் முடிவு செய்துள்ளது.
எனவே இந்தியா-ஆஸ்திரேலியா நடுவே ஜனவரி 31ம் தேதி, எஸ்.சி.ஜி மைதானத்தில் நடைபெற உள்ள கேஎப்சி டி20 சர்வதேச சீரிசின் 3வது போட்டியில் வசூலாகும் தொகை, மெக்ராத் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதோடு, அந்த போட்டி, பிங்க் பந்து கொண்டு ஆடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.