மொஹாலி: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியை அட்டகாசமாக வென்று ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று விட்டது இந்தியா.
துணை கேப்டன் கோஹ்லியின் அபாரமான சதம் மற்றும் கேப்டன் டோணியின் 80 ரன்கள் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தன.

முன்னதாக நியூசிலாந்து அணி தனது பேட்டிங்கின்போது 49.4 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின்
டாம் லாதம், ஜிம்மி நீஷாம், ராஸ் டெய்லர் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.
முன்னதாக இந்தியா டாஸ் வென்று நியூசிலாந்து முதலில் பேட் செய்யப் பணித்தது. இதையடுத்து களம் இறங்கிய தொடக்க ஜோடியான கப்தில் மற்றும் லாதம் ஆகியோர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கப்தில் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கனே வில்லியம்சனை 22 ரன்களில் வெளியேற்றினார் கேதார் ஜாதவ்.
இருப்பினும் ராஸ் டெய்லர் சற்று பொறுப்பாக ஆடி 44 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார். பின்னர் வந்தவர்களில் நீஷாம் அசத்தினார். சிறப்பாக ஆடிய அவர் 57 ரன்கள் குவித்தார். இறுதிக் கட்டத்தில் மாட் ஹென்றி மளமளவென 39 ரன்களைச் சேர்த்துக் கொடுக்க நியூசிலாந்து 49.4 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய பந்து வீச்சாளர்களில் உமேஷ் யாதவ், கேதார் ஜாதவ் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். பும்ரா, அமித் மிஸ்ராவுக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன.
இதையடுத்து ஆடத் தொடங்கிய இந்தியாவுக்கு தொடக்கம் சிறப்பாக இல்லை. இருப்பினும் டோணியும், கோஹ்லியும் சேர்ந்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து ரன்களைக் குவிக்கத் தொடங்கினார். டோணி 91 பந்துகளில் 80 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். மறுபக்கம் விராத் கோஹ்லி அபாரமாக ஆடி சதம் போட்டார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய கோஹ்லி 154 ரன்களைக் குவித்து இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா நியூசிலாந்தை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றிக்கு 2 விக்கெட்களும், செளதீக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன.