ஹராரே: இந்திய அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் குவித்துள்ளது.
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் இரு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் 2 போட்டியில் வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹராரேயில் நடக்கிறது.

3வது முறையாக இன்றும், டாசில் வென்ற ஜிம்பாப்வே பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ரஹானே 15 ரன்களிலும், முரளி விஜய் 13 ரன்களிலும் நடையை கட்டினர். சற்று தாக்குப்பிடித்த ராபின் உத்தப்பா 31 ரன்களில் அவுட் ஆனார். மனோஜ் திவாரி 10 ரன்களில் வெளியேற, இந்திய அணி 22 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்து தடுமாறியது.
இருப்பினும் மனிஷ் பாண்டே-கேதர் ஜாதவ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. பாண்டே தனது முதல் போட்டியிலேயே அரை சதம் கடந்து 71 ரன்களில் வெளியேறினார். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ரன்கள் குவித்தது. கேதர் ஜாதவ் 87 பந்துகளில், 105 ரன்களுடனும், ஸ்டூவர்ட் பின்னி 8 பந்துகளில் 18 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் நின்றனர்.
ஜிம்பாப்வே தரப்பில் நெவில்லே மட்சிவா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னதாக, முதல் ஆட்டத்தில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
கடந்த 2 போட்டியிலும் சிறப்பாக ஆடிய இந்திய பேட்ஸ்மேனான அம்பட்டி ராயுடு காயம் காரணமாக இன்றைய போட்டியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதில், மனிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்காக பாண்டேயின் முதல் போட்டி இதுவாகும். ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், இந்திய ஒருநாள் அணியின் 206வது வீரராக களம் கண்டார்.
அதேபோல தவல் குல்கர்ணிக்கு பதிலாக, மோகித் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார். ஹாட்ரிக் வெற்றியுடன் இந்திய அணி தொடரை ஒயிட்-வாஷ் செய்தால்தான், ஐசிசி தரவரிசையில் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்க முடியும் என்பதால், இப்போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.