ஹராரே: ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது இந்தியா.
முதல் ஒருநாள் போட்டியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்ற இந்தியா, தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் 3வது போட்டி அதே, ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதுவரை இரு போட்டிகளிலும் டோணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். இன்று ஜிம்பாப்வே கேப்டன், கிரேம் கிரிமர் டாஸ் வென்றபோதிலும், அவரும் தனது அணி முதலில் பேட் செய்யும் என்று அறிவித்தார். இதையடுத்து இந்தியா பவுலிங்கை தொடங்கியது.
ஆரம்பம் முதலே இந்திய பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் நடையை கட்டினர். இதனால், 43வது ஓவரில் 123 ரன்களில் ஜிம்பாப்வே ஆல்-அவுட் ஆனது. உசி சிபாண்டா அதிகபட்சமாக 38 ரன்களை எடுத்தார். 3 போட்டிகளிலுமே அந்த அணி 150 ரன்களை கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தரப்பில் பும்ரா 4, சஹல் 2, தவல் குல்கர்னி மற்றும் அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து இந்தியா அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர் கருண் நாயர் நீக்கப்பட்டு, பதிலாக குஜராத் பேட்ஸ்மேன் பயாஸ் பசல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய ஒருநாள் அணிக்கு அவர் ஆடும் முதல் போட்டி இதுவாகும். ராகுலுடன், பசல் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினார்.
கேஷ் ராகுல், பயாஸ் பசல் ஜோடி ஆரம்பத்திலிருந்தே கவனமாக ஆடினார்கள். முதல் 10 ஓவர்களில் 43 ரன்கள் சேர்த்து இந்த ஜோடி. அடுத்தப் பத்து ஓவர்களில் ரன் குவிப்பதை ஓரளவு வேகப்படுத்தினார்கள். இதனால் 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 109 ரன்கள் எடுத்திருந்தது.
லோகேஷ் ராகுல் 58 பந்துகளில் அரை சதம் எடுத்தார். பயாஸ் பசல் அறிமுகப் போட்டியிலேயே அரை சதம் எடுத்தார். அவரும் அதே 58 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். இறுதியில் 21.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 126 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது இந்தியா. லோகேஷ் ராகுல் 63 ரன்களுடனும், பயாஸ் பசல் 55 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.