இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்
இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்று கணக்கில் தொடரை வென்றது. இந்திய கேப்டன் கோஹ்லி திருமணத்திற்காக ஓய்வில் இருப்பதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
தொடர் சமன்
முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய 112 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாக தோற்றது.மொஹாலியில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வியில் இருந்து மீண்டது. இந்திய அணி பேட்டிங் அதிரடியால் 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் எடுத்தது. 393 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை 50 ஓவருக்கு 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என்று கணக்கில் சமனில் இருந்தது.
கடைசி ஒருநாள் போட்டி
இந்தியா இலங்கை மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் இன்று நடந்தது.
இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்றது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்குகியது. இலங்கை தொடக்கத்தில் அதிரடியாக ஆடிக் கொண்டு இருந்தது. ஆனால் இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் வீரர்கள் வரிசையாக விக்கெட்டை இழந்தார்கள்.
எளிதான இலக்கு
இலங்கையில் உபுல் தரங்கா மட்டும் அதிரடியாக ஆடி 95 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இந்த நிலையில் 44.5 ஓவர் முடிவில் இலங்கை 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பவுலர்கள் சாஹல், குல்தீப் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். பாண்டியா 2 விக்கெட் எடுத்தார். பும்ரா, புவனேஷ்வர்குமார் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இந்தியா அதிரடி
215 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி இந்தியா விளையாடியது. ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக ஆடி 65 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ரோஹித் சர்மா 7 ரன்களுக்கு அவுட் ஆனார். ஷிகர் தவான் சிறப்பாக ஆடி 100 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் அதிரடியாக 26 ரன்கள் எடுத்தார். இந்தியா 32.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஒருநாள் தொடர் வெற்றி
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இலங்கை வெற்றி அடைந்தது. இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி அடைந்தது. மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதன் மூலம் 20 வருடமாக இலங்கைக்கு எதிராக இந்திய மண்ணில் ஒரு ஒருநாள் தொடரை கூட இழந்தது இல்லை என்ற சாதனையை தக்க வைத்து இருக்கிறது. மேலும் இந்த வருடத்தில் நடக்கும் கடைசி ஒருநாள் போட்டியை வெற்றியுடன் முடித்து இருக்கிறது.