சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டுவென்டி 20 தொடரை 3-0 என்ற கணக்கில் அட்டகாசமாக வென்றுள்ளது இந்தியா.
முன்னதாக 3வது மற்றும் கடைசி டுவென்டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடி ரன் குவித்தது. கேப்டன் ஷான் வாட்சன் அபார சதம் போட்டார். ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. ஆனால் இந்திய வீரர்கள் அட்டகாசமாக சேஸ் செய்து கலக்கி விட்டனர்.
ஆஸி. கேப்டன் வாட்சன் 71 பந்துகளில் 124 ரன்களை நொறுக்கித் தள்ளி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் இந்தியத் தரப்பில் ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் பேட்டிங்கில் பின்னி எடுத்து விட்டனர். இன்னொரு பக்கம் ஷிகர் தவான் புயல் வேகத்தில் ஆடி ஆஸி. பந்து வீச்சாளர்களை அரட்டி விட்டார்.

இப்போட்டியில் இறுதி வரை சற்றும் விறுவிறுப்பு குறையாமல் சேஸ் செய்த இந்தியா, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை சாய்த்து அதிரடி வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று ஆஸி.க்கு வெள்ளை அடித்தது இந்தியா. ஆஸ்திரேலியாவை சொந்த ஊரில் வைத்து இந்தியா வெள்ளை அடித்தது இதுவே முதல் முறை
ரோஹித் சர்மா (52), விராத் கோஹ்லி (50) அரை சதம் போட்டனர். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் விளாசினார். ஷிகர் தவான் வெறும் 9 பந்துகளில் 26 ரன்களைக் குவித்து வெளியேறினார்.
கடைசி நேரத்தில் சுரேஷ் ரெய்னாவும், யுவராஜ் சிங்கும் சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 200 ரன்களைக் குவித்தது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயமடைந்த ஆரோன் பின்ச்சுக்குப் பதில் உஸ்மான் காஜா சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோல காமரூன் பான்கிராப்ட், டிரவிஸ் ஹெட், காமரூன் பாய்ஸ், ஷான் டெய்ட் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை. முதல் இரு போட்டிகளில் ஆடிய அணியே இப்போட்டியிலும் களம் இறக்கப்பட்டது.