டெஸ்ட் போட்டி
வங்கதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கிறிஸ்ட் சர்ச் நகரில் நாளை 3-வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. அதனால், வீரர்கள் அனைவரும் மசூதிக்கு அருகே இருக்கும் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
தொழுகையில் இருந்தனர்
இந்நிலையில், தொழுகைக்காக வீரர்கள் அனைவரும் சொகுசுப் பேருந்து ஒன்றில் மசூதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். மசூதி வளாகத்துக்குள் சில வீரர்களும் இருந்தனர். மற்றவர்கள் பேருந்திலும் அமர்ந்திருந்தனர்.
துப்பாக்கிச்சூடு சத்தம்
அப்போது, மசூதிக்குள் திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அதை கேட்டதும், வளாகத்துக்குள் சென்ற வங்கதேச வீரர்கள் சிலர் அங்கிருந்து தப்பி வெளியே ஓடினர்.
வீரர்கள் ஓடினர்
பின்னர் பேருந்தில் இருந்த வீரர்களுக்கு துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்களும் அங்கிருந்து ஓடி ஹோட்டலுக்குள்ளே சென்று தற்காத்துக் கொண்டனர்.
உயிர் தப்பிய அதிசயம்
இது குறித்து வங்கதேச அணி ஆலோசகர் சீனிவாஸ் சந்திரசேகரன் கூறியதாவது: துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறோம். அதாவது சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஜஸ்ட் எஸ்கேப்.
எங்கும் பதற்றம்
எனது இதயத்துடிப்பு மிகவும் வேகமாக துடிக்கிறது. எங்கு பார்த்தாலும் பதற்றம் காணப்படுகிறது. நாங்களும் பதற்றமாக தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
நிலைகுலைந்த செய்தியாளர்
வங்கதேச நாளேடான டெய்லி ஸ்டார் செய்தியாளர் மஜார் உதின் என்பவர் வங்கதேச அணியுடன் தான் இருக்கிறார். அவரும் இந்த துப்பாக்கிச்சூட்டால் நிலை குலைந்து போயிருக்கிறார்.
ஓடி உயிர் தப்பினோம்
அவர் கூறியிருப்பதாவது:அந்த சத்தம் கேட்ட போது, அங்கிருந்து தப்பி பேருந்தில் இருந்த வீரர்களுக்கு கூறினோம். அவர்களும் பேருந்திலிருந்து குதித்து, ஓட்டலுக்குள் ஓடி உயிர் பிழைத்தோம் என்று தெரிவித்துள்ளார்.
கடும் அதிர்ச்சி
துப்பாக்கிச்சூடு இரு நாடுகளை மட்டுமல்லாது கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. வீரர்களும் பலரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
3வது போட்டி ரத்து
இதையடுத்து,நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை தொடங்க உள்ள இந்தப் போட்டி நடக்கும் மைதானம், துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த மசூதிக்கு அருகேதான் இருக்கிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எனவே, திட்டமிட்டபடி நாளை போட்டி தொடங்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. தற்போது, வங்கதேச கிரிக்கெட் வாரியம், நியூசிலாந்து வாரியத்துடன் கலந்து ஆலோசித்துள்ளது. அதன் விளைவாக, 3வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.