டி20 உலகக்கோப்பை அணி
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. அந்தவகையில் ஆசிய கோப்பை தொடரில் இருந்த வீரர்களே 80-90 % இந்த அணியிலும் இடம்பெறுவார்கள் என ரோகித் சர்மா முன்பு கூறியிருந்தார். இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் சொதப்பியதால் தற்போது குழப்பம் உருவாகியுள்ளது.
பவுலிங் படை
அணியின் முதல் பிரச்சினையாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் உள்ளனர். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர்கள் இருவரும் தற்போது முழு உடற்தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அடுத்து வரவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்களை வைத்து தான் முழு ஃபிட்னஸும் தெரியவரும்.
2வது குழப்பம்
2வது பிரச்சினை தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் பிரச்சினையை தீர்ப்பது தான். ஆசிய கோப்பையில் இருவரையும் வைத்து குழப்பிக்கொண்டதில் இந்திய அணி கடைசி ஓவர்களில் ரன் அடிக்க முடியாமல் திணறியது. எனவே இருவரில் யாரை ப்ளேயிங் 11ல் எடுக்கப்போகிறார்கள் என்பதை தற்போதே டிராவிட் - ரோகித் ஆகியோர் முடிவு செய்ய வேண்டும்.
ஜடேஜாவின் மாற்று
அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விளகியுள்ளார். அவருக்கு மாற்று வீரர் இன்னும் யாருமே இல்லை என்பது தான் உண்மை. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் அக்ஷர் பட்டேல் மீதும் பிசிசிஐ-க்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. எனவே ஜடேஜாவின் இடத்திற்கு சிறந்த மாற்றை தேர்வு செய்ய வேண்டும்.
மிடில் ஆர்டர்
இந்திய அணியில் மீண்டும் மிடில் ஆர்டர் பிரச்சினை தலைதூக்கியுள்ள்து. ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் என 3 வீரர்களுமே நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த தவறுகின்றனர். இதற்கு காரணம் அவர்களின் பேட்டிங் இடத்தை மாற்றி கொண்டே இருப்பது தான். எனவே சரியான, நிலையான இடத்தை கொடுத்து அவர்களை களமிறக்க வேண்டும்.