
நாளை போட்டி
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் நடுவேயான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது.

அலீம்தார் ரிட்டர்ன்
இந்த போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த முன்னணி நடுவரான அலீம் தார் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஒரு நடுவர் பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் சிவசேனா கட்சி பாகிஸ்தானுக்கும், அந்த நாட்டவர்களுக்கும் எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவருவதால், எஞ்சிய இரு ஒருநாள் போட்டிகளில் நடுவராக பணியாற்ற வேண்டாம் என்று அலீம்தாரை ஐசிசி கேட்டுக்கொண்டது. எனவே அவர் தாய் நாடு திரும்புகிறார்.

இருவரும் இந்தியரே
இந்நிலையில், வேறு ஒரு நடுவரை உடனடியாக சென்னை போட்டியில் அம்பையராக பணியாற்ற அழைக்க போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தால், சென்னையை சேர்ந்தவரும், ஐசிசி எலைட் நடுவர்களுக்கான குழுவில் இடம்பிடித்துள்ளவருமான சுந்தரம் ரவியை, இப்போட்டியில் நடுவராக களமிறக்க ஐசிசி முடிவு செய்துள்ளது.

ஐசிசி விதிமுறை
இரு அணிகள் மோதும் போட்டிகளில், கள நடுவர்களில் ஒருவர் போட்டி நடைபெறும் நாட்டை சேர்ந்தவராகவும், மற்றொருவர் பொதுவான ஒரு நாட்டை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும் என்பது ஐசிசி விதிமுறை. ஆனால், தவிர்க்க முடியாத காலங்களில் இந்த விதியில் மாற்றம் செய்யவும் விதிமுறையில் வழிவகை உள்ளது.

வாரியங்கள் ஓகே
ஒரே நாட்டை சேர்ந்த இரு களநடுவர்கள் ஒரு போட்டியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டுமானால், ஆடும் இரு அணி வாரியங்களும் அதற்கு இசைவு தெரிவிக்க வேண்டும். அந்த வகையில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடமும், பிசிசிஐயிடமும் ஐசிசி கருத்து கேட்டது. இரு வாரியங்களும், தங்களுக்கு ஆட்சேபனையில்லை என்று கூறிவிட்டன.

முக்கிய போட்டி
எனவே இந்தியாவை சேர்ந்த இரு நடுவர்கள் 4வது ஒருநாள் போட்டியில் பணியாற்ற உள்ளனர். தொடரில், தற்போது 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையிலுள்ளது. 4வது ஒருநாள் போட்டி சென்னையிலும், கடைசி போட்டி 25ம் தேதி மும்பையிலும் நடைபெற உள்ளது குறி்ப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











