ராய்ப்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியில் அதிரடியாக நான்கு வீரர்களை நீக்கினார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். இதனால் இந்தியா தடுமாறும் என எதிர்பார்த்த நிலையில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைபற்றியது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2 - 1 என்ற நிலையில் முன்னிலையில் இருந்தது. நான்காவது டி20 போட்டியில் வென்றால் இந்தியா தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நிலையில் அணியில் நான்கு வீரர்களை நீக்கியது இந்திய அணி.

மூன்றாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் அதிக ரன்களை வாரி இறைத்த பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக முகேஷ் குமார், தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்பட்டனர். முகேஷ் குமார் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக பந்து வீசினார். மூன்றாவது போட்டியில் தன் திருமணம் இருந்ததால் பங்கேற்கவில்லை. தற்போது அணிக்கு திரும்பினார். தீபக் சாஹர் நீண்ட நாட்களுக்கு பின் சர்வதேச போட்டியில் பங்கேற்றார்.
ஓய்வில் இருந்து அணிக்கு திரும்பி இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷன் நீக்கப்பட்டார். ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டி இந்த மாற்றம் செய்யப்பட்டது. இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் என்பதால் மற்றொரு விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட்டு மிடில் ஆர்டரில் ஆடி வரும் திலக் வர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரிங்கு சிங் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் ரவி பிஷ்னோய், அக்சர் பட்டேல் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி ரன் கொடுக்காமல் ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் கொடுத்தால் இந்த வெற்றி சாத்தியமானது.
தீபக் சாஹர் 2, ரவி பிஷ்னோய் 1, அக்சர் பட்டேல் 3, ஆவேஸ் கான் 1 விக்கெட் வீழ்த்தினர். ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அக்சர் பட்டேல் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தினார். சூர்யகுமார் செய்த அணி மாற்றம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது.